

நெல்லை ,ஏப். 5: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ,எதிர்க்கட்சிகள் மீது கடுமையான அரசியல் விவாதங்களை முன்வைத்துப் பேசினார். குறிப்பாக ,“முத்தமிழறிஞர் கலைஞரை யாராலும் சிறை வைக்க முடியாது” என்று அவர் ஆவேசமாக குறிப்பிட்ட வார்த்தைகள் ,தற்போதைய தேர்தல் களத்தில் பெரும் அரசியல் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளன.
“ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,நெல்லை ,பாளையங்கோட்டை மற்றும் ராதாபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் ஒரு பகுதியாக நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
also : CSK vs PBKS LIVE: 29 பந்துகளில் அரைசதம் அடித்த அயுஷ் மத்திரே
கூட்டத்தில் நெல்லை சீமையின் வரலாற்றுப் பெருமைகளையும் ,பாரம்பரியத்தையும் நினைவு கூர்ந்து தனது உரையைத் தொடங்கிய முதலமைச்சர் ,இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் எண்ணற்ற தியாகங்களைச் செய்த வீரமிக்க மண்ணில் தான் நின்று கொண்டிருப்பதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும் ,மத்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் உரிமைகளையும் ,தன்னாட்சியையும் பாதுகாக்கும் முதன்மை நோக்கத்துடனேயே தாம் இந்தத் தேர்தல் களத்தில் நின்று கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து ,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி சவால் விடுத்துப் பேசிய மு.க.ஸ்டாலின் ,அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “முன்னாள் முதலமைச்சர் கலைஞரை வீட்டுச் சிறையில் வைத்ததாகக் கூறுவது அரசியல் எல்லைகளை மீறிய பேச்சு. வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்த காலத்தை ,அரசியல் காரணங்களுக்காகத் தவறாகச் சித்தரித்துப் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மறைந்த பிறகும் கூட ,மெரினாவில் கலைஞருக்கு முறைப்படி நினைவிடத்திற்கான இடம் தர மறுத்து நீதிமன்றம் வரை முட்டுக்கட்டை போட்டவர்களுக்கு ,இன்று அவரைப் பற்றிப் பேசுவதற்கு எந்தவொரு தகுதியும் இல்லை” என அவர் சாடினார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரங்கேறிய சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகளையும் தனது உரையில் அவர் பட்டியலிட்டார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு ,சாத்தான்குளம் தந்தை-மகன் மரணச் சம்பவம் ,பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு போன்ற பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர் ,இத்தகைய சம்பவங்கள் ஒட்டுமொத்த பொதுமக்களையும் பயமுறுத்தி ,தமிழ்நாட்டின் அமைதியைச் சீரழித்ததாகக் குற்றம் சாட்டினார்.
மறுபுறம் ,தற்போதைய திமுக அரசின் சாதனைகளை விளக்கிய முதலமைச்சர் ,மகளிருக்கான விடியல் பயண இலவசப் பேருந்துத் திட்டம் ,நெல்லை மாவட்டத்தின் நீண்டகாலத் தேவையான தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டம் மற்றும் தமிழர்களின் தொன்மையை உலகிற்குப் பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களைச் சுட்டிக்காட்டினார். இவை தவிர நெல்லை ,தூத்துக்குடி ,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்காகப் பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் விவரித்தார்.
இறுதியாக ,வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றி என்பது ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாக அமைய வேண்டும் என்று தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்தார். தமிழக மக்கள் தங்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஏற்கனவே தீர்க்கமாக முடிவு செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,இந்தத் தேர்தலில் தங்களுக்கு முழுமையான மக்கள் ஆதரவு கிடைப்பது உறுதி எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.







