டெக் செய்தி , ஜூன் 20 : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் அசுர வேகம் காட்டி வரும் வேளையில் இந்தியா தனக்கென ஒரு பிரத்யேக அடிப்படைக் கட்டமைப்பை (Foundational AI Model) உருவாக்க இன்னும் தடுமாறி வருவது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ZOHO கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் குமார் வேம்பு, “இந்தியா எந்த ஏஐ பந்தயத்தையும் தவறவிடவில்லை; நமது முன்னுரிமைகளும் முதலீட்டுத் திறனும் வேறானவை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அறிவியல் ஆராய்ச்சிக்கு கட்டுப்படியாகுமா இந்தியா?
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தனக்கென ஒரு ஏஐ மாடலை உருவாக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் நாம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறோமே, உற்பத்தித் துறையைப் போல இதிலும் நாம் வாய்ப்பை இழந்துவிட்டோமா?” என்ற கேள்விக்கு குமார் வேம்பு யதார்த்தமான பதிலை முன்வைத்தார்.
“ஒரு தனிநபராக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும் அல்லது நாடாக இருந்தாலும் நம்மிடம் இருக்கும் மூலதனத்தை (Capital Allocation) எதற்கு முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். ஏஐ தொழில்நுட்பத்தின் அறிவியல் இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படாத காலகட்டத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் பில்லியன் கணக்கான டாலர்களை அதில் கொட்டின. வணிக ரீதியாக அதன் வெற்றி உறுதியாகாத நிலையில் இந்தியாவால் அவ்வளவு பெரிய தொகையை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே ஒதுக்க முடியாது. அந்தப் பெருந்தொகை நமது வரம்பிற்கு அப்பாற்பட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது உலக அளவில் ஏஐ அறிவியல் நிரூபிக்கப்பட்டுவிட்டது. பல தொழில்நுட்ப கூறுகள் பொதுவெளியில் (Public Domain) கிடைக்கின்றன. ‘டீப் சீக்’ (DeepSeek) போன்ற நிறுவனங்கள் மிகக் குறைந்த செலவில் மாடல்களை உருவாக்க முடியும் என்று காட்டியுள்ளன. எனவே இப்போது ஏஐ என்பது ஒரு ‘அறிவியல்’ சவால் அல்ல; அது ஒரு ‘பொறியியல்’ (Engineering) சவால் மட்டுமே. இதனால் நாம் முன்பை விட மிகக் குறைந்த மூலதனத்தில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கையாள முடியும்” என்றார்.
ஆபத்தில்லாத துறைகளைத் தேடும் இந்திய மூலதனம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 0.65% மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரம் குறித்துப் பேசிய அவர் இந்தியாவில் மூலதன பற்றாக்குறை இருப்பதை ஒப்புக்கொண்டார்.
“இந்தியாவில் மூலதனம் என்பது எளிதில் கிடைக்காத, அதிக மதிப்புள்ள ஒன்று. எனவே பணம் வைத்திருப்பவர்கள் அதிக ஆபத்துள்ள (High-risk) ஆராய்ச்சிகளில் முதலீடு செய்யத் தயங்குவது இயல்பு. இந்தியாவில் அடிப்படைத் தேவைகளான சுகாதாரம், முதியோர் பராமரிப்பு, டிஜிட்டல் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் ஏகப்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இவை மிகக் குறைந்த ஆபத்துள்ள நிச்சயம் லாபம் தரக்கூடிய துறைகள். வாய்க்காலில் ஓடும் தண்ணீரைப் போல, மூலதனமும் ஆபத்தில்லாத எளிமையான பாதையை நோக்கியே பாயும்” — குமார் வேம்பு
ஏஐ இறையாண்மையும் புதிய ஏகாதிபத்திய அச்சமும்
அமெரிக்காவில் ஏஐ மாடல்களை அரசு கண்காணிக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது மற்றும் அந்த்ரோபிக் (Anthropic) போன்ற நிறுவனங்கள் ஏஐ ஒழுங்குமுறையை வலியுறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. உலகளாவிய இந்த மாற்றங்களால் இந்தியாவின் டிஜிட்டல் இறையாண்மைக்கு (Digital Sovereignty) ஆபத்து ஏற்படுமா அல்லது புதிய ‘டிஜிட்டல் ஏகாதிபத்தியம்’ உருவாகுமா என்ற அச்சம் எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த வேம்பு, “இந்த சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கில்லை. தரவுப் பாதுகாப்பு (Data Protection) சட்டங்கள் மூலம் இந்தியர்களின் தரவுகள் இந்திய எல்லைக்குள்ளேயே இருக்கும் தரவு மையங்களில்தான் (Data Centers) சேமிக்கப்பட வேண்டும் என்று அரசு இப்போது கட்டாயமாக்கியுள்ளது. டெலிகிராம் செயலியில் சிக்கல் எழுந்தபோது இந்தியா அதனைத் தடை செய்தது. ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) போன்ற நிறுவனங்கள் விண்வெளியில் தரவுகளைச் சேமிக்கும் சூழல் வந்தாலும் நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளது” என்றார்.
அரசு தரப்பில் ‘இந்தியா ஏஐ மிஷன்’ (India AI Mission) போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 32% மட்டுமே பயன்படுத்தப்பட்டதால் அடுத்த பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டது போன்ற கொள்கை ரீதியான குறைபாடுகள் குறித்துக் கேட்டபோது தான் பட்ஜெட் விவரங்களை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை என்று கூறிய அவர், ஒரு வணிகரின் பார்வையில் ஏஐ ஒரு சிறந்த கருவி (Tool) மட்டுமே என்று குறிப்பிட்டார்.
90% இந்திய ஐடி நிறுவனங்களின் இலக்கு ‘பயன்பாடு’ தான்
“இந்திய ஐடி நிறுவனங்களோ அல்லது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களோ கடந்த 40 ஆண்டுகளாக ஆப்பரேட்டிங் சிஸ்டம், கம்பைலர்கள் அல்லது மைக்ரோபிராசஸர் போன்ற எந்தவொரு அடிப்படை உள்கட்டமைப்பு மென்பொருளையும் (Foundational Layer) இந்தியாவில் உருவாக்கவில்லை. ஆனால் அதை வைத்துப் பெரிய அளவிலான வணிகத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளோம். அதேதான் ஏஐ தொழில்நுட்பத்திலும் நடக்கிறது” என்று வேம்பு விளக்கினார்.
இந்தியாவின் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்கட்டமைப்பை உருவாக்குவதை விட ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வாறு தங்களது சேவைகளில் பயன்படுத்துவது (Adoption) என்பதிலேயே கவனம் செலுத்துகின்றன. வாடிக்கையாளர் சேவைகளில் ஏஐ சாட்பாட்களைப் பயன்படுத்தி 80% பணிகளைத் தானியங்கி மயமாக்குவதில் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அமெரிக்காவில் உள்ள திறமையாளர்கள் நீண்ட கால ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபடும்போது, இந்தியத் திறமையாளர்கள் உடனடி வருவாய் மற்றும் சந்தை வாய்ப்புகளைத் தரும் ஏஐ பயன்பாட்டுத் (Applications) துறைகளில் பசி உணவோடு உழைக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
ஏஐ தொழில்நுட்பம் வகுப்பறைகளுக்குள் நுழைவது மாணவர்களின் சுயசிந்தனை மற்றும் பகுத்தறியும் திறனைக் (Critical Thinking) கெடுத்துவிடுமா என்ற கவலைக்கு இந்தியக் கல்வி முறையின் தரம் குறித்து வேம்பு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“நாம் ஏஐ தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் மனிதத் திறமையோ அல்லது மூலதனமோ குறைவு என்பது அல்ல; மாறாக நமது கல்வியின் தரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதுதான். எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கையால் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை எழுத்து அறிவோ, கணித அறிவோ கூட இருப்பதில்லை. பொறியியல் கல்லூரிகளிலும் ‘ரோட் லேர்னிங்’ (Rote learning) எனப்படும் மனப்பாடம் செய்யும் முறையே ஆதிக்கம் செலுத்துகிறது. செய்முறைத் திறன்கள் பூஜ்ஜியமாக உள்ளன” என்று சாடினார்.
நேர்காணலில் கேட்கப்படும் மாணவர்கள்Java அல்லது C மென்பொருள் பற்றித் தங்கள் சுயவிவரக் குறிப்பில் எழுதினாலும் அதைப்பற்றிப் பேசும்போது ஆற்றல் இல்லாமல் இருக்கிறார்கள்; ஆனால் சமையல் அல்லது கைப்பந்து பற்றிப் பேசும்போது துடிப்புடன் இருக்கிறார்கள் என்பதை அவர் உதாரணமாகக் காட்டினார்.
“இந்தியக் கல்வி முறை மனிதத் திறமைகளை வீணடிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. ஒவ்வொரு மட்டத்திலும் மனித ஆற்றல் குறைத்து மதிப்பிடப்பட்டு, தகுதிக்குக் குறைவான வேலைகளிலேயே மக்கள் அமர்கிறார்கள். இது வேலையின்மை மட்டுமல்ல தகுதிக்குக் குறைவான வேலைவாய்ப்பு (Underemployment) என்ற மிகப்பெரிய அவலம்” என்று குமார் வேம்பு கவலை தெரிவித்தார்.
தொழில்நுட்ப வல்லுநருக்கும் (Technologist) பொறியாளருக்கும் (Engineer) உள்ள வேறுபாட்டை விளக்கிய அவர், “தொழில்நுட்ப வல்லுநர் புதிய வழிமுறைகளைக் கண்டறிய முற்படுவார்; பொறியாளர் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரச்சினைகளைத் தீர்ப்பார். இந்தியா இப்போது பொறியியல் ரீதியாக ஏஐ தொழில்நுட்பத்தை அணுகத் தயாராக வேண்டும்” என்று கூறி முடித்தார்.







