தேனி , ஜூன் 10 : தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ என்று போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த திரைத்துறையினரும், ரசிகர்களும், அரசியல் பிரமுகர்களும் ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் மூழ்கியுள்ளனர். தற்போது சென்னை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக இன்று இரவு 9.30 மணி வரை சென்னை இல்லத்தில் பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நிறைவு பெற்றதும், அவரது உடல் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாகப் புறப்பட்டு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட உள்ளது. தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி அருகே உள்ள காட்ரோடு பகுதியில் பாரதிராஜாவிற்குச் சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ளது. சென்னையில் இருந்து கொண்டு வரப்படும் அவரது உடல் இந்த பண்ணை வீட்டிற்கு எடுத்து வரப்பட்டு அங்குள்ள பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Also : கமல் ஹாசன் கேட்டு மறுத்த பாரதிராஜா: வெள்ளித்திரை ஆளுமையின் அறியப்படாத பக்கங்கள்
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு: கடைசி வரை நிறைவேறாமலே போன ஆசை – நடிகர் ஆனந்தராஜ்
சொந்த மண்ணில் பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின்னர் நாளை மாலை 3 மணி அளவில் பண்ணை வீட்டு வளாகத்திலேயே அரசு மரியாதையுடன் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தமிழக சினிமாவை ஸ்டுடியோக்களுக்குள் இருந்து கிராமத்து மண் வாசனைக்குக் கொண்டு வந்த உன்னதக் கலைஞனுக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுப்பதற்கான அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் தற்பொழுது தீவிரமாகத் தொடங்கியுள்ளன.
இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு மற்றும் நல்லடக்க நிகழ்வு அவரது சொந்த மாவட்டமான தேனியில் நடைபெறுவதை முன்னிட்டு அங்கு முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரளுவார்கள் என்பதால் இன்று மாலையிலிருந்தே தேனி மாவட்ட வருவாய்த்துறையினரும் காவல் துறையினரும் இணைந்து பண்ணை வீட்டில் நேரில் ஆய்வுகளைத் தொடங்கினர். பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு மற்றும் பெரியகுளம் தாசில்தார் ஆகியோர் காட்ரோடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்கு நேரில் சென்று, அஞ்சலி செலுத்துவதற்கான இட வசதிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) சினேகா பிரியா, பாரதிராஜாவின் பண்ணை வீட்டிற்கு நேரில் வருகை தந்து தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் முன்னேற்பாடுகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இறுதி அஞ்சலி செலுத்த வரும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் வருகையை முறைப்படுத்துவது குறித்தும் பண்ணை வீட்டின் பாதுகாப்பு அடுக்குகள் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.
மேலும் பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் பாரதிராஜாவின் உடலுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவார்கள் என்பதால் அங்கு நிலவக்கூடிய கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், விஐபி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை முறைப்படி நிறுத்துவதற்கான வாகன நிறுத்துமிட (Пarking) வசதிகள் குறித்தும் எஸ்பி சினேகா பிரியா நேரில் பார்வையிட்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இயக்குநர் இமயத்தின் இறுதிப் பயணத்தில் அவரது சொந்த ஊர் மக்கள் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பெருந்திரளாக வருகை தருவார்கள் என்பது உறுதி என்பதால், எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் இறுதிச்சடங்குகளை நடத்துவது குறித்தும் பாதுகாப்புப் பணிகளை எவ்விதம் முழுமையாக மேற்கொள்வது என்பது குறித்தும் அங்கு பணியில் இருக்கும் காவல் துறையினருடன் மாவட்ட எஸ்பி சினேகா பிரியா தற்பொழுது தீவிர ஆலோசனை மேற்கொண்டு, பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். தேனி மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இணைந்து இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுப் பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தியுள்ளன.








