
வாஷிங்டனில் டிரம்ப் பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு பின்னணி!
வாஷிங்டன் , ஏப்ரல் 26 : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்ற உயர்மட்ட ஊடக விருந்து நிகழ்ச்சியில் திடீரென அரங்கேறிய துப்பாக்கிச்சூடு சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற பாரம்பரியமிக்க ‘ஒயிட் ஹவுஸ் கரஸ்பாண்டண்ட்ஸ் டின்னர்’ (White House Correspondents’ Dinner) நிகழ்ச்சியின் போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான சர்வதேச பத்திரிகையாளர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வாஷிங்டன் வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
வழக்கமான உற்சாகத்துடன் இரவு விருந்து நிகழ்வுகள் நகர்ந்து கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. சம்பவ இடத்தின் பாதுகாப்பு சோதனைப் பகுதிக்கு மிக அருகில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட பாதுகாப்புத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. எதிர்பாராத இந்த சத்தத்தால் விழா அரங்கிற்குள் இருந்த தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் கடுமையான பீதி நிலவியது. பாதுகாப்பு கருதி அங்கிருந்தவர்கள் உடனடியாக மேஜைகளின் கீழ் தஞ்சமடைந்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்ட அடுத்த சில வினாடிகளிலேயே சுதாரித்துக் கொண்ட அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் (United States Secret Service) அதிகாரிகள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிற முக்கியத் தலைவர்களைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக அரங்கை விட்டு வெளியேற்றினர்.
இந்தத் துணிகரத் தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு ஒற்ற நபராக ஒருவன் நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளன. கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க அந்த நபர் பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றுள்ளார். அவரிடமிருந்து அதிநவீன துப்பாக்கி மட்டுமன்றி கத்திகள் உள்ளிட்ட இதர ஆபத்தான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிபர் இருக்கும் பகுதி நோக்கி நகர முயன்ற அந்த நபரைப் பாதுகாப்புப் படையினர் உடனடியாகக் கடுமையான போராட்டத்திற்குப் பின் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
இந்த அதிரடிப் போராட்டத்தின் போது அதிபரின் பாதுகாப்பில் இருந்த சீக்ரெட் சர்வீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். எனினும் அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத கவசம் (Bulletproof vest) அவரது உயிரைக் காத்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் மிகத் துரிதமான மற்றும் சாதுரியமான இந்தச் செயல்பாட்டின் காரணமாக ஒரு பெரும் அசம்பாவிதமும் உயிர்ச்சேதமும் விழா வளாகத்திற்குள்ளேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆபத்தான சூழலிலும் தீரத்துடன் செயல்பட்ட பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் தனது தனிப்பட்ட பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது எப்.பி.ஐ உள்ளிட்ட உயர் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் எந்தவொரு வெளிநாட்டுச் சதியோ அல்லது பயங்கரவாத அமைப்புகளின் தொடர்போ இருப்பதாகத் தெரியவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு தனி நபர் நடத்திய ‘லோன் உல்ஃப்’ (Lone Wolf) ரகத் தாக்குதல் என்ற கோணத்தில் விரிவான விசாரணைகள் நகர்கின்றன. இது தொடர்பாகப் பேசிய அதிபர் டிரம்ப் இது முற்றிலும் ஒரு தனிநபரின் திட்டமிட்ட தாக்குதல் நடவடிக்கை போலவே தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் முயற்சிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகப் பண்புகள் நிறைந்த சமூகத்தில் வன்முறைக்கு எவ்வித இடமும் இல்லை என்றும் இத்தகைய அச்சுறுத்தல் தரக்கூடிய தாக்குதல்கள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை என்றும் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.







