சென்னை , ஏப்ரல் 27 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ன் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 85 சதவீதத்தை எட்டியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் நடப்பு அரசியல் வட்டாரங்களில் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. வரலாறு காணாத இந்த வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்கு எதிரான அலையா அல்லது புதிய அரசியல் சக்திகளின் வருகையால் ஏற்பட்ட தாக்கமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தேர்தல் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள புதிய பகுப்பாய்வுகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு யதார்த்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இந்த அதிரடி உயர்வு என்பது களத்தில் வாக்காளர்கள் அள்ளியடித்ததால் ஏற்பட்ட ‘அப்சல்யூட்’ உயர்வு அல்ல; அது வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பால் உருவான ‘ரிலேடிவ்’ புள்ளிவிவர மாற்றம் மட்டுமே என்று அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முக்கிய கட்சிகள் அனைத்தும் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை | TNElection2026
தேர்தல் ஆணையம் அண்மையில் மேற்கொண்ட ‘எஸ்ஐஆர்’ (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு செயல்முறைதான் இந்த 85 சதவீத எண்ணிக்கைக்குப் பின்னால் இருக்கும் அசல் ரகசியம். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 6.41 கோடியாக இருந்தது. ஆனால் இந்த முறை போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தீவிர தூய்மைப் பணி காரணமாக சுமார் 70 லட்சம் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக நடப்புத் தேர்தலில் தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.73 கோடியாகக் குறைந்தது. இந்தச் சுருக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் கணக்கிடப்படும் போதுதான் வாக்குப்பதிவு சதவீதம் 85 ஆக உயர்ந்து நிற்கிறது. ஒருவேளை பழைய 6.41 கோடி வாக்காளர்கள் என்ற அடிப்படையிலேயே இதைக் கணக்கிட்டால் இந்த வாக்குப்பதிவு வெறும் 76 சதவீதத்தை மட்டுமே தொட்டிருக்கும். எனவே பகுதி அளவு குறைந்ததன் காரணமாகவே ஒட்டுமொத்த சதவீதம் அதிகமாகத் தோன்றுகிறதே தவிர வாக்குச் சாவடிக்கு வந்த மக்களின் எண்ணிக்கையில் பிரம்மாண்டப் பாய்ச்சல் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என்பது தெளிவாகிறது.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகத் தலைநகர் சென்னையின் ஒன்பது முக்கியத் தொகுதிகளில் கிடைத்துள்ள வாக்குப்பதிவுத் தரவுகளைக் குறிப்பிடலாம். சைதாப்பேட்டை தொகுதியில் கடந்த முறையை விட வாக்குப்பதிவு 57 சதவீதத்திலிருந்து 77 சதவீதமாகக் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆனால் ஆச்சரியமளிக்கும் விதமாக அங்குப் பதிவான ஒட்டுமொத்த வாக்குகளின் அசல் எண்ணிக்கை கடந்த முறையை விடக் குறைவாகவே உள்ளது. இதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் சுமார் 4,000 வாக்குகளும் தியாகராய நகர் தொகுதியில் சுமார் 5,500 வாக்குகளும் கடந்த தேர்தலை விடக் குறைந்துள்ளன. சதவீதம் உயர்ந்தாலும் அசல் வாக்குகளின் எண்ணிக்கை குறையலாம் என்ற இந்த விசித்திரமான புள்ளிவிவர முரண் ஒட்டுமொத்த மாநில அளவிலான 85 சதவீத கணக்கிற்கும் மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறது.
அதேநேரம் இந்தத் தேர்தலில் கூடுதலாகப் பதிவாகியுள்ளதாகக் கருதப்படும் சுமார் 20 முதல் 25 லட்சம் வாக்குகள் முழுவதும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் போன்ற புதிய அரசியல் சக்தியின் பக்கமே சாய்ந்துவிட்டதாக நிலவும் அரசியல் கணிப்புகளையும் நிபுணர்கள் முற்றிலுமாக மறுக்கிறார்கள். கள நிலவரப்படி இந்த கூடுதல் வாக்குகளுக்குப் பின்னால் புதிய இளமுறை வாக்காளர்கள், வெளி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்து மறுபதிவு செய்துகொண்டவர்கள் எனப் பலதரப்பட்ட காரணிகள் கலந்துள்ளன. எனவே ஒட்டுமொத்த கூடுதல் வாக்குகளையும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தனிநபருக்கோ அல்லது ஒரே கட்சிக்கான அலையாகவோ சுருக்கிப் பார்க்க முடியாது என்பதே எதார்த்தமான பார்வையாக உள்ளது.
இளைஞர்களின் எழுச்சி மற்றும் குடும்பம் குடும்பமாக மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வந்த விதம் இம்முறை பிரதானமாகப் பேசப்பட்டாலும் கூட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையும் தலைகீழாக மாற்றும் அளவுக்கு இளைஞர்களின் வாக்கு சதவீதம் மட்டுமே தனியாகப் பெரிய பங்கைக் கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டின் வாக்காளர் கட்டமைப்பில் இளைஞர்களின் ஓட்டுகள் முக்கியப் பங்கு வகித்தாலும் அவர்கள் மட்டுமே ஒட்டுமொத்த தேர்தல் தலைவிதியைத் தீர்மானித்துவிட முடியாது என்று தரவுகள் கூறுகின்றன.
அதேபோல் இந்த 2026 தேர்தலில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்காளர்களின் வாக்குச் செலுத்தும் மனநிலையில் மிகத் தெளிவானதொரு வர்க்க வேறுபாடு தென்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் வாழும் நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவு மக்கள் தங்களின் பொருளாதார நிலை, அன்றாட வாழ்க்கைத் தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதற்கு நேர்மாறாகக் கிராமப்புறங்களில் வாழும் விவசாயிகளும் தொழிலாளர்களும் தங்களுக்குக் நேரடியாகக் கிடைக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பினை மையமாக வைத்து வாக்களித்துள்ளனர். இதனால் நகர்ப்புற உயர் அடுக்குக் குடும்பப் பெண் ஒருவரின் வாக்குத் தேர்வும் கிராமப்புற ஏழைப் பெண் ஒருவரின் வாக்குத் தேர்வும் முற்றிலும் இருவேறு துருவங்களாக அமைந்திருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் களப் போராட்டத்தை எதிர்கொள்வதில் கட்சிகளின் அடிமட்ட கட்டமைப்பு பலம் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தேர்தல் களத்தை எதிர்கொள்வதில் தங்களின் பல தசாப்த கால வலுவான கட்சி அமைப்பையும் பூத் கமிட்டி கட்டமைப்பையும் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் உட்கட்சி பலவீனங்கள் மற்றும் தேர்தல் உத்திகள் எந்தளவுக்குக் கை கொடுத்துள்ளன என்பது விவாதப் பொருளாகியுள்ளது. அரசியல் அலைகள் தற்காலிகமாக வீசினாலும் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பிலும் வாக்காளர்களைச் சாவடிக்கு அழைத்து வருவதிலும் கட்சி அமைப்பை முழுமையாக இயக்கியவர்களுக்கே தேர்தல் களத்தில் கூடுதல் சாதகம் இருக்கும் என்பது அரசியல் வல்லுநர்களின் கணிப்பு.







