விருதுநகர் , ஜூன் 20 : தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தற்போதைய அமைச்சர் கீர்த்தனா நேரடி சவால் விடுத்துள்ளார். தன்னிடம் அனைத்து ஆதாரங்களும் துல்லியமான காலவரிசையுடன் (Timeline) தயாராக இருப்பதாகவும் அதனைச் சட்டசபையில் நிரூபிக்கக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீர்த்தனா, புதிய முதலீடுகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சி குறித்துப் பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்திற்குத் தேவையான மறுஉறுதிப்பாட்டை (Reassurance) அரசு வெற்றிகரமாக வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் மோத்திலிங் மற்றும் ஹயூசாங் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார். இந்த இரு நிறுவனங்களின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா (Groundbreaking) மிக விரைவில் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகக் கோயில்களில் வெள்ளை அறிக்கை தேவை: நெல்லையில் காடேஸ்வரா சுப்ரமணியம்
ஆவடியில் அதிரடி: 53 கிலோ கஞ்சா பறிமுதல் ,25 பேர் கைது
கடந்த முப்பது நாட்களில் மட்டும் பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்தும் அளவிற்குத் துறைசார் பணிகள் வேகமெடுத்துள்ளன என்று அமைச்சர் விவரித்தார். தமிழகத்திலிருந்து நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அவர் “ஆந்திராவிற்கு நிறுவனங்கள் சென்றுவிட்டதாகச் சொல்பவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். ஆனால் எல்லா இடங்களிலும் இதனைப் பேசிக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. அதற்குரிய சரியான மேடையில் மட்டுமே உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டும். வரவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தொடரில் இது குறித்து யாராவது கேள்வி எழுப்புவார்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு கேள்வி கேட்கப்படும்போது எந்தக் காலகட்டத்தில், எந்தத் தேதியில், எந்தக் காரணத்திற்காக நிறுவனங்கள் ஆந்திராவிற்குச் சென்றன என்பதற்கான முழுமையான ஆதாரங்களை உரிய குறிப்புகளுடன் (Remarks) நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன். கேள்வி கேட்பவர்கள் அதற்குத் தயாராக இருந்து கொள்ளட்டும்” என்று கூறினார்.
தொழில்துறை முதலீடுகள் என்பது மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்படும் முடிவல்ல என்பதை விளக்கிய அமைச்சர், முப்பது நாட்களில் ஒரு நிறுவனம் தனது ஒட்டுமொத்த முடிவையும் மாற்றிவிட முடியாது என்று குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) உள்ளிட்ட பல்வேறு அரசு நடைமுறைகள் மற்றும் சட்டப்பூர்வமான செயல்முறைகள் இதில் அடங்கியுள்ளன. முந்தைய காலகட்டத்தில் ஏற்பட்ட இத்தகைய நடைமுறைத் தாமதங்கள் காரணமாகவே சில நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்ல நேரிட்டது என்றும் அதற்கான காரணங்கள் அனைத்தும் தேதியுடன் தன்னிடம் ஆவணமாக உள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இவ்வளவு நாட்கள் நான் அமைதியாக இருந்ததற்குக் காரணமே என்னிடம் முழுமையான ஆதாரங்கள் இருப்பதுதான். முறையான மேடையில் பேசினால் மட்டுமே அது முழுமையாகப் பொதுவெளியில் பதிவாகும். இல்லையென்றால், ஊடகங்களில் ஒரு சில பகுதிகள் மட்டுமே வெளியாகி உண்மைச் செய்தி சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. அதனால்தான் சட்டசபையில் ஆதாரங்களுடன் விளக்கமளிக்கக் காத்திருக்கிறேன்” என்றார்.
திமுகவின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீதான விமர்சனத்தை முன்வைத்த அமைச்சர் கீர்த்தனா அவர் இன்னமும் தன்னைத் தொழில்துறை அமைச்சராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சாடினார். தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாக மாற்றத்தைத் தயவுசெய்து அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மக்கள் தங்களுக்கு அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொண்டு பண்ணையார் என்ற மனோபாவத்தைக் கைவிட வேண்டும் என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய அரசின் செயல்பாடுகளைக் குறைத்து மதிப்பிடுவது தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களையே அவமதிக்கும் செயலாக அமையும் என்றும் அமைச்சர் கீர்த்தனா தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.







