ஆவடி ,ஜூன் 20 : ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 53 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்

Re
ஆவடி காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா உத்தரவின் பேரில் இந்த சிறப்பு கஞ்சா கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுப்பதற்காக 100 காவலர்களைக் கொண்ட ஒரு சிறப்புப் படை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இந்த படையைச் சேர்ந்தவர்கள் 30 கண்காணிப்புக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஆவடி ஆணையரக எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர். குறிப்பாக சந்தேகத்திற்குரிய மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ள 128 முக்கிய இடங்களை அடையாளம் கண்டு இந்த குழுக்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டன.
also : ஆதாரம் இருக்கு; சட்டசபையில் நிரூபிக்க தயார்: டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்!
இந்த ஒரு வார கால அதிரடி சோதனையின் போது சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 53 கிலோ கஞ்சா ,83 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சிரஞ்சுகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக மொத்தம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போதைப்பொருள் தாக்கத்தில் இருந்தவர்கள் மீது ஐந்து வழக்குகளும் சந்தேகத்திற்கு இடமான முறையில் போதை மாத்திரைகளை வைத்திருந்த நபர்கள் மீது மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சோதனையின் போது போதைப்பொருள் பயன்படுத்திய 17 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 16 இளம் வயதினர் போலீஸாரிடம் சிக்கினர். இவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு போலீஸார் இவர்களைக் கைது செய்யாமல் அவர்களுக்குத் தேவையான உரிய ஆலோசனைகளையும் கவுன்சிலிங்கையும் வழங்கினர். பின்னர் அவர்களது பெற்றோர்களை நேரில் வரவழைத்து போதைப்பொருட்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்து அந்த இளைஞர்களைப் பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
அதேவேளையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும் கடத்தியதாகவும் 25 குற்றவாளிகள் இந்த சிறப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2026 ஆம் ஆண்டில் ஆவடி காவல் ஆணையரகப் பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரை மட்டும் மொத்தம் 13,131 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 50க்கும் மேற்பட்ட முக்கியக் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆவடி காவல் ஆணையரகம் எச்சரித்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க இதுபோன்ற அதிரடிச் சோதனைகள் தொடர்ந்து தொய்வின்றி நடத்தப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





