திருநெல்வேலி , ஏப்ரல் 18 : திருநெல்வேலி பாளையங்கோட்டைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கு கருகிய உணவு வழங்கப்பட்டதோடு சேவை குறைபாடும் ஏற்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபருக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது.
பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் தங்கதுரை என்பவர் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் அங்குள்ள ‘அர்பன் தாபா’ (Urban Dhaba) என்ற உணவகத்திற்குச் சென்றுள்ளார். அந்த உணவகம் ஐந்து நிமிடங்களில் விரைவாக உணவு பரிமாறப்படும் என்ற விளம்பர வாக்குறுதியை முன்வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பி தனது குழந்தைகளுக்காக இரண்டு பிரெட் ஆம்லெட் மற்றும் காபி ஆர்டர் செய்த தங்கதுரை, அதற்காக 420 ரூபாயையும் செலுத்தியுள்ளார்.
ஆனால் உணவகத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிக்கு மாறாக, உணவு வழங்கப்பட ஏறத்தாழ முப்பது நிமிடங்கள் தாமதமாகியுள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பரிமாறப்பட்ட பிரெட் ஆம்லெட்டும் கருகிய நிலையில், முற்றிலும் தரமற்றதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் முறையான பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் இந்த ஆர்டருக்கு உரிய பில் வழங்கப்படாததுடன், ஜிஎஸ்டி என்ற பெயரில் கூடுதலாக இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
உணவகத்தின் இந்த அலட்சியமான செயல்பாட்டினாலும் தரமற்ற சேவையினாலும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி, தங்கதுரை திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விரிவாக விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், உணவகத்தின் விளம்பரங்கள், அவர்களின் சேவைத் தரம் மற்றும் ரசீது இல்லாமல் கூடுதல் வரி வசூலித்த முறைகள் ஆகியவற்றைச் சட்டப்பூர்வமாக ஆராய்ந்தது. விசாரணையின் முடிவில் உணவகத்தின் தரப்பில் அப்பட்டமான சேவை குறைபாடு (Deficiency in Service) இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட தங்கதுரைக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ஐந்தாயிரம் ரூபாயும், இந்த வழக்கிற்கான செலவுத் தொகையாக ஐந்தாயிரம் ரூபாயும் என மொத்தம் பத்தாயிரம் ரூபாயை நஷ்டஈடாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தொகையை தீர்ப்பு வெளியான ஒரு மாத காலத்திற்குள் உணவக நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ஆண்டுக்கு ஒன்பது சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க நேரிடும் என்றும் நீதிமன்ற உத்தரவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.







