
புது தில்லி , April 3 : இந்தியாவின் முக்கிய கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE),வரும் 2026-27 கல்வியாண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மாணவர்களின் மனப்பாடம் செய்யும் முறையைக் குறைத்து,அவர்களின் கருத்தாற்றல்,பகுப்பாய்வுத் திறன் மற்றும் உயர்நிலை சிந்தனைத் திறன்களை (HOTS) மேம்படுத்தும் நோக்கில் இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய பாடத்திட்டத்தின் கீழ்,குறிப்பாக 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் (Maths) மற்றும் அறிவியல் (Science) பாடங்களில் “இரட்டை நிலை மதிப்பீட்டு முறை” (Two-Level Assessment) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்,மாணவர்கள் தங்களது கற்றல் திறனைப் பொறுத்து ‘ஸ்டாண்டர்ட்’ (Standard) அல்லது ‘அட்வான்ஸ்டு’ (Advanced) ஆகிய நிலைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய தேர்வு முறையின்படி,அனைத்து மாணவர்களும் பொதுவான பாடத்திட்டத்தின் அடிப்படையில் 80 மதிப்பெண்களைக் கொண்ட கட்டாய ‘ஸ்டாண்டர்ட்’ தேர்வை எழுத வேண்டும்.இதற்கான கால அளவு 3 மணி நேரமாகும்.அதேவேளையில்,கூடுதல் திறன் கொண்ட மாணவர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் 25 மதிப்பெண்களுக்கான ‘அட்வான்ஸ்டு’ தேர்வையும் எழுதலாம்.1 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வு முழுமையாக உயர்நிலை சிந்தனைத் திறனைச் சோதிக்கும் வினாக்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும்.
இதனுடன்,தேசிய கல்விக் கொள்கையின் (NEP) வழிகாட்டுதலின்படி,6ஆம் வகுப்பு முதல் ‘மும்மொழிக் கொள்கை’ (Three Language Formula) அமல்படுத்தப்படுகிறது.இதன் கீழ் மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்பதுடன்,அதில் இரண்டு மொழிகள் கட்டாயமாக இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.இந்த விதிமுறையானது,9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் பயிலும் அனைத்து மொழிகளிலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது .
இந்த புதிய கல்வி முறை மாற்றம்,தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களிடையே முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக ஐஐடி (IIT) மற்றும் நீட் (NEET) போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு,இந்த ‘அட்வான்ஸ்டு’ கணிதம் மற்றும் அறிவியல் தேர்வுகள் முன்கூட்டியே பயிற்சி பெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.







