நெல்லை , ஜூன் 21: நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித் திரிந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை மாநகரப் பகுதியில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பாளையங்கோட்டை காவல் நிலைய போலீஸார் கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சந்தேகப்படும்படியாக நடந்து வந்த இரண்டு வாலிபர்களை போலீஸார் மறித்து விசாரித்தனர்.
விஜய்க்கு கிடைத்த பாதி வாக்குகள் அண்ணாமலைக்கே சேர வேண்டியவை? பிரபாகரன் அதிரடி பேச்சு!
போலீஸாரின் கேள்விகளுக்கு அந்த இளைஞர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அந்தச் சோதனையில் அவர்கள் தங்களது உடமைகளில் விற்பனைக்காகக் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இருவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீஸார் அவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விரிவான விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் தெற்குத் தெருவைச் சேர்ந்த தேன்ராஜ் பாண்டியன் (22) மற்றும் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த சில காலமாக நெல்லை கே.டி.சி. நகர் பகுதியிலேயே தங்கியிருந்து அங்குள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் அம்பலமானது.
வேலையின் ஊடே இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததையடுத்து இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுக்குப் பின்னணியில் நெல்லையில் கஞ்சா சப்ளை செய்யும் கும்பல் ஏதேனும் செயல்படுகிறதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.







