விருதுநகர் , ஜூன் 14 : உலகளாவிய பட்டாசு சந்தையில் சீனாவிற்கு இணையாகத் தமிழ்நாட்டின் பங்களிப்பை உயர்த்தும் வகையில் புதிய ஏற்றுமதி கொள்கை (Export Policy) வகுக்கப்படும் என்று குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். சிவகாசியின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் ,சர்வதேச தரத்திற்கு அதன் மதிப்பை உயர்த்தவும் சட்டப்பூர்வமான வழிமுறைகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ,உலக அளவில் பல்வேறு நாடுகளுக்குச் சீனா பெருமளவில் பட்டாசுகளை ஏற்றுமதி செய்து வரும் வேளையில் ,தகுதியும் திறமையும் வாய்ந்த சிவகாசி இன்னும் சர்வதேச சந்தையை முழுமையாக எட்டாமல் இருப்பது குறித்த தனது கவலையை வெளிப்படுத்தினார். சிவகாசி பட்டாசுகளின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதன் மூலம் ஒட்டுமொத்த விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரத் தரமே உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் தடையற்ற போக்குவரத்து மற்றும் துறைமுகக் கட்டமைப்பு வசதிகள் அருகிலேயே இருப்பதால் ,சர்வதேச ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் மிக எளிதாக சாத்தியப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் தனது தென்கொரிய பயணத்தின் போது சிவகாசி பட்டாசுகளின் சிறப்புகள் குறித்து அங்குள்ள பிரதிநிதிகளிடம் விவரித்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் ,தமிழகத்தின் இந்தத் தொழில்வளம் குறித்து அவர்கள் வியப்புடன் கேட்டறிந்ததோடு ,தங்களை அங்கு வருமாறும் அழைப்பு விடுத்ததாகக் கூறினார். இதேபோல் ,போலந்து நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
சர்வதேச அளவில் சிவகாசி பட்டாசுகளுக்கான தேவை மற்றும் சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் கீர்த்தனா ,முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி ,இதற்கான சட்டப்பூர்வ ஏற்றுமதி கொள்கை முறையான ஆய்வுகளுக்குப் பின் விரைவில் உருவாக்கப்படும் என்றார். சிவகாசியை பொருளாதார ரீதியாகப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல இந்த ஏற்றுமதி பாலிசி மிக முக்கிய காரணியாக அமையும் என்றும் அவர் உறுதியளித்தார்.







