மயிலம் ,ஜூன் 13: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ,வைகாசி மாத கிருத்திகை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கே கோயிலின் நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக பொடி ,பஞ்சாமிர்தம் ,பால் ,சந்தனம் ,தேன் ,திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் முறைப்படி நடத்தப்பட்டது. பின்னர் மூலவருக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வாக இரவு நேரத்தில் மலர்களால் விஷேசமாக அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வள்ளி மற்றும் தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர் இரவு பாரம்பரிய முறைப்படி தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி மலை வலம் வரும் காட்சி நடைபெற்றது.
also : திருக்கோஷ்டியூரில் நம்பிகளின் 1040-வது அவதார திருநட்சத்திர விழா கோலாகலமாகத் தொடங்கியது
இந்த விழாவில் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் “முருகனுக்கு அரோகரா” ,”கந்தனுக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டவாறு தங்கமயில் வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரை வடம்பிடித்து இழுத்து மலைப்பாதையை வலம் வந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.








