
சென்னை , ஏப்ரல் 29 : தமிழக அரசியல் வரலாறும் சினிமா வரலாறும் எப்போதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை என்பதை தற்போதைய அரசியல் நகர்வுகளும் சமகாலத் திரைப்பட வெளியீடுகளும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. அரை நூற்றாண்டுக்கு முன்பு ஒரு பிரம்மாண்ட திரைப்பட வெளியீட்டின்போது அரங்கேறிய அதே அரசியல் சதுரங்க ஆட்டம் தற்போதைய ‘ஜனநாயகன்’ திரைப்படச் சூழலிலும் எதிரொலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன.
கடந்த 1972ஆம் ஆண்டு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து (திமுக) நீக்கப்பட்ட நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (அதிமுக) தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே அவர் நடித்து இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் 1973ஆம் ஆண்டு மே மாதம் வெளியீட்டுக்குத் தயாரானது. புதிய கட்சி தொடங்கப்பட்ட சூழலில் வெளியான அந்தத் திரைப்படம் வெறும் வணிக ரீதியிலான சினிமா மட்டுமல்லாமல் எம்ஜிஆரின் அரசியல் பலத்தைப் பரிசோதிக்கும் ஒரு களமாக மாறியது.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: 9,400 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது மத்திய அரசு
அக்காலகட்டத்தில் ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தம் காரணமாக ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்திற்குப் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் படத்திற்கான விளம்பர சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. தியேட்டர் உரிமையாளர்களுக்குத் மறைமுக மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் திரைப்படத்தின் ஃபிலிம் சுருள்கள் (பிரிண்ட்கள்) தியேட்டர்களுக்குச் சென்றடைவதைத் தடுக்கச் சதி வேலைகள் நடந்ததாகவும் கூறப்பட்டது. சினிமா விநியோகக் கட்டமைப்பு முழுமையாகச் சென்னை மையமாக இருந்ததால் நிலவிய நெருக்கடியை முறியடிக்க எம்ஜிஆர் தனிப்பட்ட முறையில் மும்பையிலிருந்து பிரிண்ட்களைத் தயாரித்து ரகசியமான வழிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குக் கொண்டு சேர்த்தார்.
அரசியல் ரீதியாகப் படத்திற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டாலும் அதனைத் தகர்க்கும் வகையில் மக்கள் ஆதரவு தன்னிச்சையாக உருவானது. விளம்பர சுவரொட்டிகள் தடை செய்யப்பட்டதால் எம்ஜிஆரின் ஆதரவாளர்கள் மற்றும் ரிக்சா தொழிலாளர்கள் தங்களின் வாகனங்கள் மற்றும் கடைகளில் படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டிப் பிரசாரம் செய்தனர். சில திரையரங்குகளில் திட்டமிட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது ரசிகர்களே ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்து படத்தைத் திரையிட்ட சம்பவங்களும் அரங்கேறின. அனைத்துத் தடைகளையும் தாண்டி திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த மக்கள் ஆதரவு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தைப் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியாக மாற்றியது. தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் இத்திரைப்படம் 100 நாட்களைக் கடந்தும் மதுரையில் 175 நாட்களுக்கு மேலாகவும் ஓடி சாதனை படைத்தது. இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்ட வணிக வெற்றியும் மக்கள் எழுச்சியும் எம்ஜிஆரின் அரசியல் பயணத்திற்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தன. இதன் தொடர்ச்சியாக 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்று எம்ஜிஆர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.







