வாஷிங்டன் , ஏப்ரல் 24 : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை ‘ஹெல்-ஹோல்’ (நரகம் போன்ற இடம்) என்று விமர்சித்துக் குறிப்பிட்ட விவகாரம் சர்வதேச அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் பெருமையைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ள ட்ரம்பின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு, அண்டை நாடான ஈரான் கடுமையான முறையில் கண்டனம் தெரிவித்து இந்தியாவிற்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளது.
குடியுரிமைச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்துகளில், இந்தியாவையும் சீனாவையும் தரம் தாழ்த்திப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் ட்ரம்பிற்கு நேரடியாகவும் மிகச் சாதுரியமாகவும் பதிலடி கொடுத்துள்ளது.
தங்களது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் ஈரான் தூதரகம் ஒரு சிறப்புக் காணொளியைப் பகிர்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம், கண்கவர் இயற்கை எழில் மற்றும் பல்வேறு துறைகளில் நாடு அடைந்துள்ள அபார வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் அந்த வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு நிறுத்தாமல், ‘டொனால்ட் ட்ரம்ப் ஒருமுறை நேரில் இந்தியாவிற்கு வந்து பார்க்க வேண்டும், அதன் பிறகு பேச வேண்டும்’ என்றும் ஈரான் தூதரகம் காட்டமாகப் பதிவிட்டுள்ளது. மேலும், ட்ரம்பிற்கு ஒரு ‘கலாச்சார டிடாக்ஸ்’ (மனத்தூய்மை) தேவைப்படுகிறது என்றும் ஈரான் தூதரகம் விமர்சித்துள்ளது. இணையத்தில் மிக வேகமாகப் பரவி வரும் ஈரானின் இந்த ஆக்கப்பூர்வமான பதிலடிக்கு, இந்தியப் நெட்டிசன்கள் பலரும் தங்களது பாராட்டுகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த விவகாரத்தைக் கூர்ந்து கவனித்து வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ட்ரம்பின் கருத்துகளைக் கடுமையாகச் சாடியுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபரின் இத்தகைய பேச்சு ‘அறிவற்றது, அநாகரிகமானது மற்றும் முற்றிலும் பொருத்தமற்றது’ என்று இந்தியத் தரப்பு தங்களின் அதிகாரப்பூர்வ கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
நிலைமை தீவிரமடைவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த விவகாரத்தில் உடனடியாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் இதற்கு முன்பாகப் பலமுறை இந்தியாவை ‘மிகச் சிறந்த நாடு’ என்று மனதாரப் பாராட்டியுள்ளார் என்பதை அமெரிக்கத் தூதரகம் இந்த விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மிக முக்கியமான சுழலில் இந்த சர்ச்சை வெடித்திருப்பது இருநாட்டு ராஜதந்திர வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகளில் ஏதேனும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்க அரசியல் மற்றும் ஒருதலைப்பட்சமான விமர்சனங்களுக்கு எதிரான ஒரு வலுவான சைகையாகவே ஈரானின் இந்த அதிரடி ஆதரவு பார்க்கப்படுகிறது.







