நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாநகர் பாளையங்கோட்டை அடுத்த மகாராஜா நகரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில்அரசியல் கட்சி நிர்வாகியின் பெயரைப் பயன்படுத்தி மாமூல் கேட்டு மிரட்டும் கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதியில் விஜயா கார்டன் என்ற பெயரில் அரசு டாஸ்மாக் மதுபானக்கூடம் (பார்) செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் ஒரு குறிப்பிட்ட கும்பல், தங்களை தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மரியஜான் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறிக்கொண்டு பார் ஊழியர்களை மிரட்டி மாமூல் கேட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் தற்போதைய அரசு மதுபானக் கூடங்களுக்கான டெண்டர் காலம் முடிவடைய உள்ளதைச் சுட்டிக்காட்டி இந்த கும்பல் தினசரி கடைக்குள் நுழைந்து பணம் கேட்டு அச்சுறுத்துவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களிலும் நெல்லை வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த மாமூல் மிரட்டல் விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பார் உரிமையாளர் தனது தரப்பு குமுறலைத் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கூடங்களுக்கும் வரும் 30ஆம் தேதியுடன் உரிமத்திற்கான டெண்டர் காலம் நிறைவடைகிறது. இந்தச் சூழ்நிலையைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சமாதானபுரத்தைச் சேர்ந்த த.வெ.க மாவட்டச் செயலாளர் மரியஜானின் மகன் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறிக்கொண்டு ஒரு கும்பல் தினசரி பாருக்குள் வந்து மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்து வருகிறது. அவர்கள் கேட்கும் தொகையைத் தர மறுத்தால் வியாபாரம் செய்ய விடமாட்டோம் எனப் பகிரங்கமாக அச்சுறுத்துகிறார்கள்.
இப்படி தொடர்ந்து மிரட்டல் விடுத்து எங்களை வியாபாரம் செய்ய விடாமல் தடுத்தால் நாங்கள் எப்படி அரசாங்கத்திற்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய கட்டாய டிடி (DD) தொகையைச் செலுத்த முடியும் என்று பார் உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வியாபாரிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் இந்த விவகாரத்தில் தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு மாமூல் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டாஸ்மாக் பார் டெண்டர் முடியும் தருவாயில் அரசியல் கட்சிப் பிரமுகரின் பெயரைக் குறிப்பிட்டுப் பணம் கேட்டு மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருப்பது நெல்லை மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.







