சென்னை , ஏப்ரல் 19 : தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக மாநாட்டு மேடையில் கட்சியின் தலைவர் விஜய் தனக்கு அளித்த அங்கீகாரம் குறித்து திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த அனு ஸ்ரீ , தவெக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனக்குக் கிடைத்த அனுபவங்களை அனு ஸ்ரீ கண்கலங்கியபடி பகிர்ந்துள்ளார். மேடையில் தன்னை அழைத்து, அங்கீகாரம் கொடுத்துப் பாராட்டிய அந்தத் தருணம் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்றும், தான் சற்றும் எதிர்பாராத ஒரு மாபெரும் வாய்ப்பு அது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
தொடக்கத்தில் தவெக கட்சியின் தேர்தல் அறிக்கை (Manifesto) வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றபோது, அங்கு கட்சியின் தலைவர் விஜய் நேரடியாக வருவார் என்பது தமக்குத் தெரியாது என்று கூறும் அனு ஸ்ரீ, எதிர்பாராத விதமாக அவரிடமிருந்து பாராட்டுப் பெற்றது ஒரு மிகப்பெரிய உணர்ச்சிப் பூர்வமான அனுபவமாக அமைந்தது என்கிறார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் மேடைகளில் சமூக நீதி மற்றும் பாலின சமத்துவ விவாதங்களை மீண்டும் ஒருமுறை தீவிரமாக முன்வைத்துள்ளது.
Also : சிறுவர்களில் அதிகரிக்கும் லீன் ஃபேட்டி லிவர் பாதிப்பு: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை
அதேவேளையில், இந்த நிலையை எட்டுவதற்குத் தான் கடந்து வந்த கடுமையான பாதையையும் அவர் அந்த நேர்காணலில் நினைவு கூர்ந்துள்ளார். ஆரம்பகாலத்தில் தனது சொந்த வீட்டிலேயே தன்னை ஏற்றுக்கொள்ளாத சூழல் நிலவியதாகவும், புடவை அணிந்து வீதியில் நடக்கும்போது பலரும் கிண்டல் செய்து ஏளனமாகப் பேசினர் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். அத்தகைய ஒட்டுமொத்த சமூக மறுப்புகளையும், மன அழுத்தங்களையும் கடந்துதான் இன்று இந்த இடத்திற்குத் தான் வந்துள்ளதாகக் குறிப்பிட்ட கருத்து, தமிழகத்தில் இன்றும் திருநங்கை சமூகத்தினர் எதிர்கொள்ளும் எதார்த்தமான சவால்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
இந்த நேர்காணலின் மிக முக்கியமான பகுதியாக திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த கோரிக்கை பார்க்கப்படுகிறது. தன்னிடம் படித்த பட்டதாரி திருநங்கைகள் பலர் தகுதியோடு இருக்கிறார்கள் என்றும், ஆனால் அவர்களின் திறமையைப் பார்க்காமல் பாலின அடையாளத்தை மட்டுமே காரணமாக வைத்து பல முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை மறுப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு உதாரணமாக, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஒரு திருநங்கை மாணவிக்கு, அவரது பாலின அடையாளத்தைக் காரணம் காட்டி வேலை நிராகரிக்கப்பட்ட வேதனையான சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்ச்சியின் போது தவெக தலைவர் விஜயைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்த தருணத்தில், இந்த முக்கியப் பிரச்சினையை அவரிடம் கொண்டு சேர்த்ததாக அனு ஸ்ரீ விவரித்துள்ளார். திருநங்கை சமூகத்தினருக்கான நிலையான வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவ வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் விடுத்த கோரிக்கைக்கு, அதைச் செய்வதற்குத் தான் கண்டிப்பாக முழு முயற்சி எடுப்பேன் என விஜய் தன்னிடம் உறுதி அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், சினிமாவில் ஒரு நபர் மிக உன்னதமான இடத்திலிருந்தும், பெருமளவு பணம் சம்பாதிக்கக்கூடிய சூழலிலிருந்தும் விலகி, மக்களுக்காக அரசியலுக்கு வருகிறார் என்றால் அந்த மனது மிகப் பெரியது என்று விஜயைப் பாராட்டியுள்ளார். தமிழக அரசியல் சூழலில் ஒரு மாற்றம் தேவைப்படுவதாகவும், அதற்காகத் தனது வாக்கு இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்திற்கே என்றும் அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, தவெக மேடையில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது வெறும் தற்புகழ்ச்சிக்காக அல்லது அழகுக்காக மட்டுமே என்ற தொனியில் எழுந்த விமர்சனங்களுக்கும் அவர் தனது நேர்காணலில் பதிலடி கொடுத்துள்ளார். அத்தகைய விமர்சனங்களைத் தான் முற்றிலும் மறுப்பதாகக் கூறிய அவர், தான் சமூகத்தில் செய்த பணிகள் என்னவென்று தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், தகுதியின் அடிப்படையிலேயே தனக்கு அந்த அங்கீகாரம் கிடைத்தது என்றும் உறுதியுடன் பேசியுள்ளார்.







