
டெல்லி , ஏப்ரல் 4: மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையிலும், உலகின் மிக முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) இந்தியா தனது வலுவான நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த ஒட்டுமொத்த கடல் பகுதியையும் ஈரான் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் உலக நாடுகளின் கப்பல் போக்குவரத்து அங்கு முடங்கியுள்ள போதிலும் இந்தியாவுடன் தொடர்புடைய குறைந்தது 8 சரக்குக் கப்பல்கள் ஈரானின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி அந்தப் பாதையை வெற்றிகரமாகக் கடந்து பயணித்துள்ளதாகத் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
ALso : மேற்காசியாவில் உச்சகட்ட பதற்றம்: அமெரிக்க F-15E போர் விமானம் வீழ்த்தப்பட்டது
உலக அளவில் மிக முக்கிய கடல்வழிப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் ஒட்டுமொத்த உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதப் பங்கைக் கொண்ட கப்பல்கள் கடந்து செல்கின்றன. சர்வதேச எரிசக்தி சந்தையின் உயிர்நாடியாக விளங்கும் இந்தத் தடத்தில் ஏற்படும் சிறிய அளவிலான பதற்றமும் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. தற்போதைய பிராந்திய மோதல்களால் இந்த கடல் வழியில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்து பெருமளவில் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாகப் பல்வேறு நாடுகளில் ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் போன்ற நெருக்கடிகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.
இந்த இக்கட்டான அசாதாரண சூழ்நிலையிலும் இந்தியாவின் ‘சிவாலிக்’ (Shivalik), ‘நந்தா தேவி’ (Nanda Devi), ‘பைன் கேஸ்’ (Pine Gas), ‘ஜக் வசந்த்’ (Jag Vasant), ‘பிடபிள்யூ எல்ம்’ (BW Elm) உள்ளிட்ட முக்கியக் கப்பல்கள் தங்களின் பயணத்தை தடையின்றி மேற்கொண்டுள்ளன. இந்தியாவின் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்த மேற்கு ஆசிய கடல் தடம் மிகவும் இன்றியமையாதது என்பதால் இந்தத் துணிச்சலான நடவடிக்கை நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மிக முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் இந்தியக் கப்பல்கள் சில தந்திரோபாய மாற்றங்களையும் கையாண்டு வருகின்றன. அதன்படி நேரடி மோதல் நிலவும் ஆபத்தான பகுதிகளைத் தவிர்ப்பதற்காக ஓமான் கடற்கரையை ஒட்டிய மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி இந்தக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து வருகின்றன. அதேவேளையில் இந்த கடல் தடத்தில் பயணிக்கும் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஈரான் தரப்பில் இருந்து நேரடியாகவே உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.







