
சென்னை ,ஏப்ரல் 3: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில்,மத்திய அரசின் புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான மத்திய அரசின் புதிய சட்ட திருத்த மசோதா குறித்து தனது கடுமையான கவலைகளையும் ஆட்சேபனைகளையும் விரிவாக விளக்கி,பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள ‘வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2026’ (Foreign Contribution Regulation Amendment Bill 2026),வெளிநாட்டில் இருந்து நிதி பெறும் அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பையும் கட்டுப்பாடுகளையும் கணிசமாக அதிகரிக்கும் உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது .நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும்,வெளிநாட்டு நிதி வரவு-செலவுகளை முறைப்படுத்தவுமே இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,இந்த சட்ட திருத்தத்தால் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள்,தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாடுகள் பெருமளவில் முடக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது .இதனை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்,இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் சிறுபான்மை சமூகத்தினரின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளை நேரடியாகப் பாதிக்கும் என்று தனது கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக மாநிலங்களின் உரிமைகளில் தலையிடும் வகையில் அமைந்துள்ளதாகவும்,இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக மாறக்கூடும் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் வாதிட்டுள்ளார்







