நெல்லை , ஜூன் 8 : நெல்லை கேடிசி நகரில் கடந்த ஆண்டு அரங்கேறிய மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட அவரது காதலியின் தாய் கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நெல்லை நீதிமன்றம் வரும் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ். சென்னையில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ஆம் தேதி நெல்லை கேடிசி நகர் பகுதியில் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
நெல்லையில் நிதி நெருக்கடியால் 35 ஆண்டு பழமையான பள்ளி மூடல்: கிராம மக்கள் உண்ணாவிரதம்
கவினின் காதல் விவகாரம் காரணமாகவே இந்தத் துணிகரக் கொலை அரங்கேறியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து கவினின் காதலியான சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுபாஷினியின் தாய் கிருஷ்ணகுமாரி தலைமறைவானார்.
இதற்கிடையே வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. வழக்கைக் கையில் எடுத்த சிபிசிஐடி அதிகாரிகள் சிறையிலிருந்த தந்தை சரவணன் மற்றும் மகன் சுர்ஜித் ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த முக்கியத் தகவல்களின் அடிப்படையில் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக சுர்ஜித்தின் உறவினர் ஜெயபால் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மறுபுறம், இந்த கொடூரக் கொலையில் முக்கியத் தொடர்புடைய கிருஷ்ணகுமாரியைப் பிடிக்க சிபிசிஐடி தனிப்படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் பத்து மாதங்களாகத் தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரியை கடந்த மே மாதம் 29-ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர் நெல்லை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா, கிருஷ்ணகுமாரியை ஜூன் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட அன்றைய தினமே கிருஷ்ணகுமாரி தரப்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இதுகுறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. தொடர்ந்து ஜூன் 3-ஆம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட புகார்தாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பவானி மோகன் ஆஜராகி வக்காலத்து தாக்கல் செய்தார். இதனால் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரின் பதிலுக்காக வழக்கு விசாரணை மீண்டும் ஜூன் 8-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று நெல்லை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு மீண்டும் நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிய தரவுகளைச் சமர்ப்பிக்கத் தயாராக இருந்தார். எனினும் நேற்று புகார்தாரர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில் அவர்களின் ஆட்சேபனையைப் பதிவு செய்யவும், விரிவான விசாரணைக்காகவும் கால அவகாசம் கோரப்பட்டது.
இருதரப்பு நிலவரங்களையும் பரிசீலித்த நீதிபதி, கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.








