நெல்லை , ஜூன் 8: நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே நிதிப் பற்றாக்குறை காரணமாக 35 ஆண்டுகள் பழமையான தனியார் பள்ளி ஒன்று மூடப்பட்டதைக் கண்டித்தும் மாணவர்களின் நலன் கருதி அதனை உடனடியாக மீண்டும் திறக்க வலியுறுத்தியும் மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் இன்று (திங்கள்கிழமை) தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

விஜயநாராயணம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வெங்கட்ராயபுரம் கிராமத்தில் ‘மரிய கிரேஸ் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி’ செயல்பட்டு வந்தது. ‘மரிய கிரேஸ் ரூரல் எஜுகேஷன் சொசைட்டி’ என்ற தனியார் அமைப்பின் மூலம் கடந்த 35 ஆண்டுகளாக இப்பள்ளி இப்பகுதி மாணவர்களுக்குக் கல்வி சேவை வழங்கி வந்தது. இந்த நிலையில் பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதில் நிர்வாகத் தரப்பிற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளியை மூடுவதற்குத் தீர்மானித்த நிர்வாகத்தினர், அதற்காக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் முறையான அனுமதியைப் பெற்றனர்.
also read : ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்ச்சி கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
இதனைத் தொடர்ந்து நடப்பு 2026-2027 ஆம் கல்வி ஆண்டு முதல் பள்ளி செயல்படாது என்று பள்ளியின் நிர்வாகியான பாதிரியார் அந்தோணி ராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த திடீர் முடிவு குறித்த தகவல் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்குப் பதிவுத் தபால் (Registered Post) மூலம் பள்ளி நிர்வாகத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்புப் பலகை ஒன்றும் பள்ளி வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையிலும், பள்ளியின் வகுப்பறைகள் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டிருந்தன.
இந்தத் தனியார் பள்ளியில் வெங்கட்ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 34 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கிராமத்தின் மையப்பகுதியில் தங்களின் பிள்ளைகள் படித்து வந்த பள்ளி திடீரென மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்களும் வெங்கட்ராயபுரம் பொதுமக்களும், மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு பள்ளியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் எனப் பள்ளி நிர்வாகத்திடமும் அதிகாரிகளிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இருப்பினும் பள்ளி திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இன்று காலை பள்ளி வளாகத்தின் முன்பாக திடீரென ஒன்று கூடினர். அங்கு சாமியானா பந்தல் அமைத்து பள்ளியை மீண்டும் திறக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்திற்கு வெங்கட்ராயபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பேச்சியம்மாளின் கணவர் சுடலை தலைமை தாங்கினார்.
முப்பத்தைந்து மாணவ, மாணவிகளும், சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட கிராம மக்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர். பள்ளி மூடல் மற்றும் கிராம மக்களின் திடீர் போராட்டத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக விஜயநாராயணம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (SI) காளியப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் எனப் போராட்டக் களத்தில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








