சென்னை , ஜூன் 13 : சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் மின்தடை பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடைகாலம் என்பதால் மின்தேவை வழக்கத்தை விட பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களில் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் தற்போதைய மின்தடைக்கான காரணங்கள் குறித்தும் அதனை சீரமைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அதிகாரப்பூர்வ விளக்கங்களை அளித்துள்ளது.

மின்வாரிய தலைவர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இதுகுறித்து பேசுகையில் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தடைக்கு மின் பற்றாக்குறை காரணம் அல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கோடைகால வெப்பம் காரணமாக சென்னையில் மட்டும் மின் நுகர்வு முன்னெப்போதும் இல்லாத அளவாக 5,014 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த அதீத மின் பயன்பாட்டினால் ஏற்படும் ஓவர்லோடு எனப்படும் மின்பழு தான் பரவலான மின்தடைக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. மின்தேவையை சமாளிப்பதற்கான போதிய மின்சாரம் மின்வாரியத்தின் வசம் கையிருப்பில் உள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மின்தடைக்கு ஓவர்லோடு ஒருபுறம் காரணமாக இருந்தாலும் மற்றொரு முக்கிய தொழில்நுட்ப சிக்கலையும் மின்வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் நிலத்தடி வழியாக செல்லும் உயர்மின்னழுத்த கேபிள்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலத்தடி கேபிள்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாகவே பல பகுதிகளில் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனுடன் மின் நுகர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கும் இந்த சூழலில், மின்வாரியத்தில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையும் ஒரு சவாலாக மாறியுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கேபிள் சேதம் மற்றும் மின்பழுவினால் ஏற்படும் பழுதுபார்ப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன் விளைவாகவே மின்தடையை உடனடியாக சரிசெய்ய முடியாமல் பணிகள் தொய்வடைகின்றன என்று மின்வாரிய தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் 21 முக்கிய இடங்களில் ஏற்பட்ட மின்தடைகள் தற்போது முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. மின்மாற்றிகளில் (டிரான்ஸ்பார்மர்) ஏற்பட்ட பழுது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளால் 20 நிமிடங்கள் முதல் 8 மணி நேரம் வரை நீடித்த மின்தடைகள் தீவிர பொதுப்பணிக்கு பிறகு சீரமைக்கப்பட்டு தற்பொழுது மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.







