திருவள்ளூர் ,ஜூன் 15 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ,தற்போது கொலைக் குற்றச்சாட்டிற்கான பிரிவையும் சேர்த்து காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நேற்று மாலை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் ,மூன்று வயது பெண் குழந்தை ஒன்று கடுமையான காயங்களுடன் மயங்கிக் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டறிந்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அக்குழந்தையை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ,அக்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் குழந்தை ,இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிசோதனை மையத்திலேயே உயிரிழந்தது. தற்போது குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிறுவன் மர்ம மரணம்: மாந்திரீக நரபலியா? போலீசார் தீவிர விசாரணை
கும்மிடிப்பூண்டி சிறுமி மரணம்: தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் – திருவள்ளூர் போலீஸ் எச்சரிக்கை
தாமிரபரணி பெருமையை மறைத்த போஸ்டர்கள்: சர்ச்சைக்கு பின் நெல்லை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக ,குழந்தையின் வீட்டின் அருகே சந்தேகத்திற்கு இடமாக நடமாடிக் கொண்டிருந்த வடமாநில வாலிபர் ஒருவரை நேற்று அப்பகுதி மக்கள் பிடித்து சிப்காட் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ,அவர் அதே பகுதியில் வசித்து வரும் வித்தின் மஞ்சி (19) என்ற வடமாநிலத் தொழிலாளி என்பது தெரியவந்தது. அவர்தான் அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ,முட்புதரில் வீசிச் சென்றதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ,இச்சம்பவம் ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்று குற்றம் சாட்டி ,அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்திலும் ,சிப்காட் காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து விளக்கம் அளித்த காவல் துறையினர் ,அக்குழந்தைக்குக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஏதும் நடக்கவில்லை என்றும் ,பிடிபட்ட வித்தின் மஞ்சி என்ற நபர் மட்டுமே இக்குற்றத்தைச் செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டனர். எனினும் ,இச்சம்பவம் கூட்டுப் பாலியல் வன்கொடுமையா அல்லது தனி நபரால் நடத்தப்பட்டதா என்பது குறித்த முழுமையான உண்மை விவரங்கள் ,மருத்துவமனையின் இறுதி உடற்கூறாய்வு அறிக்கை வெளியான பின்னரே முழுமையாகத் தெரியவரும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ,இச்சம்பவம் தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை ,தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிப்காட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். தற்போது சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து ,இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலைக்கான பிரிவையும் கூடுதலாக இணைத்துள்ளனர். தற்போது போக்சோ சட்டம் மற்றும் கொலைப் பிரிவு உட்பட நான்குக்கும் மேற்பட்ட முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ,விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாகத் தொழில் நகரமாக விளங்கும் கும்மிடிப்பூண்டியில் ,இத்தகைய கொடூரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.







