திருநெல்வேலி . ஜூன் 15 : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றங்கரைப் பூங்காவில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றின் வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை விளக்கும் தகவல் பலகைகள் மீது இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் எழுந்த கடுமையான பொதுவிமர்சனத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாமிரபரணி நதியின் வரலாற்றுச் சிறப்புகள் மற்றும் அதன் சூழலியல் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் இரும்புத் தகடுகளில் பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் பொறிக்கப்பட்டு இப்பூங்காவில் வைக்கப்பட்டிருந்தன. நெல்லை மாவட்டத்தின் அடையாளமாக விளங்கும் இந்த தகவல் பலகைகள் கடந்த சில நாட்களாக போஸ்டர்களால் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தன.
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: கொலைப் பிரிவு சேர்ப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் தமிழக நிதி அமைச்சருமான மரிய வில்சன் மாவட்டத்திற்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அவரை வரவேற்கும் வகையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பு சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். இந்த சூழலில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த தாமிரபரணி வரலாற்றுத் தகவல் பலகைகளின் மீதும் இந்த போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டன.
நதியின் தொன்மையையும் அதன் வாழ்வாதாரப் பெருமையையும் விளக்கும் பகுதிகள் அரசியல் சுவரொட்டிகளால் முழுமையாக மறைக்கப்பட்ட சம்பவம் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதன் காரணமாக சில இடங்களில் இரும்புத் தகவல் பலகைகள் சேதமடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தி வரலாற்றுத் தகவல்களை மறைத்த இந்தச் செயல் சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு பேசுபொருளானது. வரலாற்று விழிப்புணர்வுப் பலகைகள் மீது விளம்பரப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதற்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததை அடுத்து திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகச் செயல்படத் தொடங்கியது. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பூங்காப் பகுதிக்கு விரைந்து சென்று தகவல் பலகைகள் மீது ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைத் தண்ணீர் அடித்து முழுமையாக அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







