ஜூன் 24: பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட 43 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 111 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் அவை ‘தீவிர கவலைக்குரிய பகுதிகள்’ என வகைப்படுத்தப்பட்டு, அவசரக்கால அறிவிப்பை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வழக்கமாக வறட்சி முழுமையாகத் தலைதூக்கிய பின்னரே மீட்புப் பணிகள் தொடங்கப்படும் நிலையை மாற்றி இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மழைப்பொழிவு பெருமளவு குறைந்துள்ளதால், நீர் பற்றாக்குறை ஏற்படும் வரை காத்திருக்காமல் உடனடியாக மாவட்ட வாரியான அவசரக்கால வேளாண் திட்டங்களைச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு: 104 சாட்சிகள்… 15 நாட்களில் தீர்ப்பு? தீவிர விசாரணை
இந்தத் திட்டத்தின் கீழ் வழக்கமான பயிர்களுக்குப் பதிலாகக் குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய மாற்றுப் பயிர்களைப் பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நிலத்தடி நீர்மட்டத்தைத் தக்கவைக்கவும், கிடைக்கின்ற நீரைச் சேமிக்கவும் நீர்நிலைகளைத் தூர்வாருதல் போன்ற பணிகளைத் தாமதமின்றி மேற்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பருவமழைப் பற்றாக்குறையால் நாட்டின் உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.





