கோவை , ஜூன் 24 : கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த வழக்கில் கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் அவர்கள் இன்று கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான சாட்சிகள் விசாரணை இன்று முறைப்படி தொடங்கியுள்ளது.

இந்த வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் மற்றும் கோவை சரக டிஐஜி சாமிநாதன் ஆகியோர் நீதிமன்றத்திற்கு நேரில் வருகை தந்துள்ளனர். வழக்கு விசாரணையைத் துரிதமாகக் கையாண்டு வரும் காவல் துறை அதிகாரிகளுக்குத் தேவையான சட்டப் பூர்வ அறிவுறுத்தல்களையும் வழக்கை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு வலுவாக எடுத்துச் செல்வது என்பது குறித்தும் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
also : சேலம் காவல் நிலையத்தில் நள்ளிரவு மாந்திரீக பூஜையா? சுவர் முழுவதும் ரத்தம் பூசப்பட்டதால் பரபரப்பு
சம்பவம் நடந்த ஒரே மாத காலத்திற்குள் இந்த வழக்கில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 819 பக்கங்களைக் கொண்ட இந்த விரிவான குற்றப்பத்திரிகையில் இந்த கொடூர சம்பவத்தோடு தொடர்புடைய 104 பேர் சாட்சியங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 104 சாட்சிகளிடமும் நீதிமன்றத்தில் நேரடியாக விசாரணை நடத்துவதற்கான பணிகள் இன்றிலிருந்து துவங்கப்பட்டுள்ளன.
வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் அனைத்து சாட்சிகளிடமும் விசாரணையை முழுமையாக முடித்து தீர்ப்பை எட்ட காவல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் ஆதாரங்கள் திரட்டப்பட்டன. கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவருக்கும் சட்டத்தின் முன் உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் அரசுத் தரப்பும் காவல் துறையும் நீதிமன்றத்தில் தங்களது வாதங்களை மிக வலுவாக முன்வைத்து வருகின்றன. இன்று முதல் இந்த வழக்கின் தினசரி விசாரணை நீதிமன்றத்தில் விறுவிறுப்பாகத் தொடர்ந்து நடைபெற உள்ளது.





