நெல்லை , ஜூலை 4: நெல்லை பெருமாள்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3.7 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை பெருமாள்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகைகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காலை 8.15 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், போலீசாரின் வாகன தணிக்கையை கண்டதும் திடீரென வண்டியை திருப்பி தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த நபரை சுற்றிலும் வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
ALso : வீரவநல்லூர் இரட்டைக் கொலை: தப்பியோடிய கும்பலைத் தேடும் தனிப்படை
தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் பாளையங்கோட்டை அடுத்த கீழநத்தம் திம்மராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த போலீசார், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது வாகனத்தின் இருக்கைக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பையை போலீசார் கைப்பற்றினர். அதில் தமிழக அரசால் முழுமையாக தடை செய்யப்பட்ட 523 குட்கா புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப் பொருட்களின் மொத்த எடை சுமார் 3.7 கிலோ ஆகும். மேலும் அவரது சட்டைப் பையை சோதனை செய்ததில் குட்கா விற்பனை மூலம் கிடைத்த ரொக்கப் பணம் 220 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து இந்த புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, பெருமாள்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் சட்டவிரோதமாக அதிக லாபத்திற்கு வேல்முருகன் விற்பனை செய்து வந்தது அம்பலமானது. பொதுமக்களின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்த குற்றத்திற்காக வேல்முருகனை போலீசார் முறைப்படி கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், குட்கா பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த பெருமாள்புரம் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து இந்த சட்டவிரோத விற்பனையின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





