திருநெல்வேலி ,ஜூன் 22 : “அப்பா இல்லை அம்மா இல்லை. நாலரைச் சுவருக்குள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையோ அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதியோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒருநாள் அரசு எங்களை அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தோடு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். ஆதரவற்ற எங்களுக்குப் பாதுகாப்பாக வாழ ஒரு சிறிய வீட்டைத் தமிழக அரசு கட்டித் தர வேண்டும்” என வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அளித்த கோரிக்கை மனு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட காவல் கிணறு விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி. இவருடைய கணவர் சஜித். குடும்ப வறுமையின் காரணமாக சஜித் சென்னையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவருமே தங்கள் உயர்கல்விக்காக வெளியூர்களில் தங்கிப் படித்து வருகின்றனர். கணவர் வெளியூரில் வேலை பார்க்கும் நிலையில் சிவகாமியும் உள்ளூரில் உள்ள ஒரு தேநீர் கடையில் வேலை பார்த்து தனது அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். வறுமை ஒருபுறம் வாட்டினாலும் தனது குடும்பத்தை மட்டுமின்றி கடந்த 11 ஆண்டுகளாக மேலும் இரண்டு குழந்தைகளையும் தனது அரவணைப்பில் வைத்து வளர்த்து வருகிறார் சிவகாமி.
also : முதல்வர் விஜய் பிறந்தநாள்: நெல்லையில் இன்று இலவசமாக இயங்கும் தனியார் பேருந்து!
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: கன்னியாகுமரி நபர் கைது
சிவகாமியின் தங்கை மற்றும் அவரது கணவர் ஆகியோர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த நிலையில் ஆதரவற்று நின்ற அவர்களது இரண்டு குழந்தைகளையும் சிவகாமி தனது முழுப் பாதுகாப்பில் ஏற்றுக்கொண்டார். கடந்த 11 வருடங்களாக அந்த இரண்டு குழந்தைகளையும் தனது சொந்தப் பிள்ளைகளைப் போலவே எந்தவொரு குறையுமின்றி தாயாக நின்று வளர்த்து வருகிறார். தங்கை பிள்ளைகளில் ஒருவரான அந்தச் சிறுமி தற்போது 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். நாளுக்கு நாள் குடும்பச் சுமை அதிகரித்து வரும் சூழலில் சிவகாமி குடியிருக்கும் வீட்டின் நிலையோ மிகவும் பரிதாபகரமானதாக உள்ளது.
இவர்கள் அனைவரும் தற்போது காவல் கிணறு விலக்கு பகுதியில் உள்ள ஒரு அரசுப் புறம்போக்கு நிலத்தில் தான் வசித்து வருகின்றனர். முறையான பட்டா இல்லாத அந்த இடத்தில் தற்காலிகமாகக் கட்டப்பட்டுள்ள சிறிய வீட்டில் அடிப்படை வசதியான கழிப்பறை கூட கிடையாது. வளர்ந்த ஒரு பெண் குழந்தையை வைத்துக்கொண்டு கழிப்பறை வசதி கூட இல்லாத வீட்டில் வசிப்பது அந்தப் குடும்பத்திற்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதோடு மட்டுமின்றி அவர்கள் குடியிருக்கும் இடம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் என்பதால் எந்த நேரத்திலும் அரசு அந்த வீட்டை இடித்து அகற்றிவிடலாம் என்ற தொடர் அச்சத்திலேயே ஒவ்வொரு நாளையும் அவர்கள் கடந்து வருகின்றனர்.
தற்போது சிவகாமிக்கு வயதாகி வருவதால் முன்பைப் போல அவரால் தேநீர் கடை வேலைக்குத் தொடர்ந்து செல்ல முடியவில்லை. உடல்நலக் குறைபாடுகளும் சோர்வும் அவரை வாட்டி வருகின்றன. இந்த நிலையில் தனக்குப் பிறகு தனது தங்கை குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பெரும் கவலை அவரைச் சூழ்ந்துள்ளது. தன்னுடைய சொந்தக் குழந்தைகள் தங்களின் கல்வியை முடித்து எதிர்காலத்தை அமைத்துக்கொண்டு சென்ற பிறகு தாய் தந்தை இல்லாத இந்த இரண்டு குழந்தைகளையும் அவர்கள் முறையாகப் பார்த்துக் கொள்வார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது என சிவகாமி வேதனை தெரிவிக்கிறார்.
தனது முதுமைக் காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாத உடல்நிலை மற்றும் எந்த நேரமும் பறிபோகலாம் என்ற நிலையில் உள்ள குடியிருப்பு ஆகிய காரணங்களால் தனது தங்கை குழந்தைகளின் பாதுகாப்பை இப்போதே உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இதற்காகவே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 12ஆம் வகுப்பு படிக்கும் தனது தங்கை மகளை அழைத்துக்கொண்டு வந்து அவர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த மனுவில் தாய் மற்றும் தந்தையை இழந்து தவிக்கும் இரண்டு குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும் அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதைக் கருத்தில் கொண்டும் தமிழக அரசு கருணை கூர்ந்து அவர்களுக்குக் கழிப்பறை வசதியுடன் கூடிய ஒரு சிறிய வீட்டை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என சிவகாமி உருக்கமுடன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்த அந்த 12ஆம் வகுப்பு மாணவியும் தனக்கும் தனது சகோதரனுக்கும் பாதுகாப்பாக வாழ்வதற்குத் தமிழக அரசு ஒரு சிறிய வீட்டை அமைத்துத் தர வேண்டும் எனத் தனது நிலைமையை விளக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி பாதுகாப்பற்ற சூழலில் தவிக்கும் இந்த ஆதரவற்ற மாணவியின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





