
Chennai , May 9 : தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் நாளை பதவியேற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்.
தமிழக அரசியலில் புதிய திருப்புமுனையை உருவாக்கிய தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தமிழக வெற்றி கழக தலைவர் ச. ஜோசப் விஜய் நாளை காலை 10 மணிக்கு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதவியேற்பு விழாவை முன்னிட்டு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் தற்போது முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் பின்புறத்தில் அமைந்துள்ள இந்த பிரமாண்ட உள்விளையாட்டு அரங்கம் தற்போது அரசியல் விழாக்கோலத்தில் மின்னுகிறது. மேடை அமைப்பு, சிவப்பு கம்பள விரிப்பு, சிறப்பு விருந்தினர்களுக்கான இருக்கைகள், பாதுகாப்பு வளையங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் இரவோடு இரவாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நேரு உள்விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு
விழாவை முன்னிட்டு நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து நுழைவாயில்களிலும் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் கூட அனுமதி சீட்டுகள் மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் சாலைகளில் உயரமான தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை முதல் அந்த பகுதியிலான போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வழக்கம்போல போக்குவரத்து நடைபெற்று வந்தாலும், அதிகாலை முதலே மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
3000 பேருடன் பிரம்மாண்ட பதவியேற்பு விழா : நேரு உள்விளையாட்டு அரங்கம் சுமார் 3000 பேருக்கும் அதிகமானோர் அமரக்கூடிய வசதியுடன் தயாராகி வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், பல்வேறு நாடுகளின் துணை தூதர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
காங்கிரஸ் தலைவர் Rahul Gandhi கூட இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் நாளை காலை டெல்லியிலிருந்து சென்னை வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜயுடன் பதவியேற்கும் அமைச்சர்கள் யார்?
தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும்பான்மைக்கு நெருக்கமான வெற்றியை பெற்ற நிலையில், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கிறது. இந்த நிலையில், விஜயுடன் சேர்த்து ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதில் செங்கோட்டையன், சிடி நிர்மல் குமார், விசான், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.
சினிமா நட்சத்திரங்கள் வருகையா?
விஜயின் அரசியல் பயணத்தில் சினிமா துறையின் தாக்கம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் நாளைய விழாவில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ விருந்தினர் பட்டியல் வெளியாகாத நிலையில் கூட, தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சென்னை முழுவதும் LED திரைகள்
பொதுமக்களும் இந்த பதவியேற்பு விழாவை நேரடியாக காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், அடையாறு டெப்போ உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் 20 முக்கிய இடங்களில் LED திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நகரின் பல பகுதிகளில் இருந்தபடியே மக்கள் விஜயின் பதவியேற்பு விழாவை நேரலையாக பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.





