
சிவகங்கை: தேவகோட்டை அருகே நீராதாரங்களை அழிக்கும் வகையில் இரவு பகலாக இயங்கி வரும் கிரவல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, நெடோடை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கிரவல் மண் எடுக்கும் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. விதிமுறைகளைப் புறந்தள்ளி, இந்த குவாரியில் இரவு பகலாக தொடர்ச்சியாக மண் அள்ளப்பட்டு வருவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், குவாரியின் செயல்பாடுகளால் தங்களின் வாழ்வாதாரமும், விவசாயமும் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து இன்று தங்களின் போராட்டத்தைத் தொடங்கினர்.
மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில், காளையார் கோவில் அருகே உள்ள புலியடித்தம்பம் பகுதியில் சாலை ஓரமாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உறுதிக்கோட்டை, திட்டுக்கோட்டை, சீனமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், தங்களின் பிரதான வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, குவாரி நிர்வாகத்தின் மீதும் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்.
“உறுதிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட திட்டுக்கோட்டை கண்மாய், உறுதிக்கோட்டை கண்மாய், சீனமங்கலம் கண்மாய், குமாரவேலூர் குடிதண்ணீர் ஊருணி மற்றும் சீனமங்கலம் குடிதண்ணீர் ஊருணி என இந்தப் பகுதியின் மிக முக்கிய நீராதாரங்கள் அனைத்தும் இந்த ஒரு கிரவல் குவாரி நடவடிக்கையால் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளன. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே எங்கள் பகுதியின் விவசாயமும் குடிநீர் தேவையும் பூர்த்தியாகி வருகிறது. தற்போதைய குவாரி செயல்பாடுகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகச் சரிந்து வருகிறது,” என போராட்டக் குழுவினர் கவலை தெரிவித்தனர்.
மேலும், பல தலைமுறைகளாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் தங்களுக்கு, இந்த குவாரி பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். விவசாய நிலங்கள் பாழாகி, குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்தால், ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்து தங்களின் சொந்தக் கிராமங்களை விட்டே வெளியேறும் அவல நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் அவர்கள் வேதனைப் பட்டனர்.
பொதுமக்களின் திடீர் நெடுஞ்சாலை ஆர்ப்பாட்டம் குறித்துத் தகவல் அறிந்ததும், தேவகோட்டை தாலுகா வட்டாட்சியர் (தாசில்தார்) தங்கமணி மற்றும் திருவேகம்பத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அவர்கள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அதிகாரிகளின் சமாதான வார்த்தைகளை ஏற்க மறுத்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையில் உறுதியாக நின்றனர். “கிரவல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாவட்ட நிர்வாகம் முழுமையாக ரத்து செய்து, பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். தற்காலிகமாகப் பணிகளை நிறுத்துவதாகக் கூறிவிட்டுச் சென்றால் நாங்கள் கலைந்து போக மாட்டோம். முறையான அரசாணை வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும்,” என பொதுமக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இப்பகுதியில் இயங்கும் குவாரி தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே பலமுறை நேரில் சென்று மனுக்கள் அளித்தும், இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதிகாரிகளின் இத்தகைய அலட்சியப் போக்கே தங்களை வீதிக்கு வந்து போராடும் நிலைக்குத் தள்ளியதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரான கனிமவளத்துறை அமைச்சர், தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை உணர்ந்து நேரடியாக ஆய்வு செய்து குவாரி அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் இறுதிக் கட்டத்தில், கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு, “நீராதாரங்களைக் காப்பாற்றுங்கள்!”, “விவசாயத்தைப் பாதுகாப்போம்!”, “விதிமீறும் குவாரி அனுமதியை உடனே ரத்து செய்!” எனப் பொதுமக்கள் எழுப்பிய கண்டன முழக்கங்கள் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தன. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.













