Chennai , June 9: தமிழக பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தேவையான 1,000 கோடி ரூபாய் நிதியை, எந்தவிதத் தயக்கமும் காட்டாமல் மத்திய அரசு முழுமையாக வழங்கியுள்ளதாகத் தமிழக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இத்துறை சார்ந்த எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விரிவாகப் பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “தமிழக முதல்வர் மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்குத் தேவையான நிவாரண மற்றும் மேம்பாட்டுப் பணிகளை எவ்வளவு விரைவாகச் சென்றடைய வைக்க வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியுடன் இருக்கிறார். பொதுமக்கள் என்னென்ன எதிர்பார்ப்புகளுடனும் நம்பிக்கையுடனும் நமக்கு வாக்களித்தார்களோ, அந்த மக்களின் எண்ணங்களை முழுமையாக நிறைவேற்றும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக எளிய முறையில், எவ்விதத் தாமதமும் இன்றி அரசின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், பேரிடர் மேலாண்மைத் துறையின் முதற்கட்ட ஆய்வுப் பணிகள் தற்போது முறைப்படி தொடங்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.
Also Read : கவின் ஆணவக் கொலை வழக்கு: 4 பேருக்கு 800 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்
தொடர்ந்து பேசிய அவர், இந்தத் துறையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர கால மற்றும் அத்தியாவசியப் பணிகள் குறித்து காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் என்னென்ன பணிகள் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்த ஆய்வுப் கூட்டங்களின் வாயிலாகத் துல்லியமாக முடிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் திட்டங்கள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, மக்கள் முழு நிறைவு பெறும் வகையிலும், அரசின் செயல்பாடுகளைப் பாராட்டும் வகையிலும் இந்தத் துறை மிகத் திறம்படச் செயல்படும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்பு குறித்துப் பேசிய அமைச்சர், “தமிழக அரசைப் பொறுத்தவரையில், நமக்குத் தேவையான பேரிடர் மேலாண்மைத் துறைக்கான பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தோம். நாம் கேட்ட அந்த முழு நிதியையும் மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டைச் செய்வதில் மத்திய அரசு எந்தவிதத் தயக்கமும் காட்டவில்லை. பொதுவாகப் பாதிப்புகள் ஏற்பட்ட பிறகு நிதி கோருவதை விட, நாம் முன்கூட்டியே கேட்ட உடனே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இந்த நிதியை மத்திய அரசு தற்போது நமக்கு வழங்கியிருக்கிறது” என்று விளக்கமளித்தார்.
மத்திய அரசு வழங்கியுள்ள இந்த 1,000 கோடி ரூபாய் நிதியைக் கொண்டு, வரவிருக்கும் பேரிடர் காலங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் அவசரகாலத் திட்டங்கள் இரண்டு மாத காலத்திற்குள் தீவிரப்படுத்தப்படும் என்று எழிலகச் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.








