சென்னை, ஜூன் 9 : தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். பெண்களுக்கான பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய படையின் கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாடுகள் குறித்த முழுமையான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை விரிவாகச் செயல்படுத்துவதற்காக மொத்தம் 2,545 புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கான அரசாணையை முதல்வர் பிறப்பித்துள்ளார். புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த பணியிடங்களில் 49 காவல் ஆய்வாளர்கள் (Inspectors) உட்பட மொத்தம் 1,843 காவலர்களும், 7 அமைச்சுப் பணியாளர்களும் (Ministry Staff) அடங்குவர். இந்த அதிரடிப்படைக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் காவலர்களுக்கு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிரத்யேக சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படையின் அவசரக்கால செயல்பாடுகள் மற்றும் ரோந்துப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்வதற்காக 319 நான்கு சக்கர வாகனங்களும், 101 இரு சக்கர வாகனங்களும் கொள்முதல் செய்யப்படவுள்ளன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் களமிறங்கும் இந்த படையினரின் செயல்பாட்டுத் திறனை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் பொருட்டு, உடலில் அணியக்கூடிய ‘பாடி ஓன் கேமராக்கள்’ (Body Worn Cameras) வழங்கப்படவுள்ளன. இது தவிர, சவாலான மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக நவீன ட்ரோன் (Drone) கேமராக்கள் உள்ளிட்ட மேம்பட்ட உபகரணங்களும் இப்படைக்கு வழங்கப்படவுள்ளன.
செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான அலுவலக உபகரணங்கள், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக, முதற்கட்டமாக 354 கோடி ரூபாய் நிதியை ஒட்டுமொத்த திட்டத்திற்காக தமிழக முதல்வர் விஜய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் பரவலாகச் செயல்படவுள்ள இந்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையின் தலைமைப் பொறுப்பை காவல்துறை தலைவர் (IG) அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் ஏற்பார். அவரது கீழ், இந்த படையின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவதற்காக காவல் கண்காணிப்பாளர் (SP) தலைமையிலான தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேற்பார்வை மற்றும் நிர்வாகக் குழுவின் செயல்பாடுகளுக்காக மட்டும் தனியாக 2.15 கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 70 ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் பிரிவுகள் உடனடியாகத் தங்களது பணிகளைத் தொடங்குகின்றன. இந்த முதற்கட்டப் பணிகளில் தற்போது துறையில் உள்ள 140 உதவி ஆய்வாளர்கள் (SI) மற்றும் 420 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த சிறப்புப் படையானது நேரடியாக முதலமைச்சரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குற்றச் சம்பவங்கள் அதிகம் நடப்பதாகக் கண்டறியப்பட்டு, காவல்துறை பட்டியலிட்டுள்ள பகுதிகள் (Hotspots), கல்வி நிறுவன வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த படையினர் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் குற்றங்களை முழுமையாகத் தடுத்து, அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இந்த சிறப்புப் படையின் முதன்மை நோக்கமாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








