சென்னை , ஜூன் 20 : தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாலியல் குற்றவாளிகளைக் கண்காணித்து ஒடுக்கவும் “வண்ணக் குறியீட்டுடன் கூடிய புதிய வகைப்பாட்டு முறைய” (Color-Coded Classification System) மாநிலக் காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. குற்றங்களின் தீவிரம் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளிகள் எட்டு வெவ்வேறு வண்ணப் பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட உள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதற்கும் காவல் துறையின் மனிதவள ஆதாரங்களை மிகவும் துல்லியமாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தி தகுந்த கண்காணிப்பை மேற்கொள்வதற்கும் இந்த நவீனத் திட்டம் வழிவகை செய்கிறது.
₹6000 கோடி செலவழித்தும் திமுக தோல்வி – துரை வைகோவின் அதிர்ச்சி அரசியல் விமர்சனம்
சிவப்பு மற்றும் ஆரஞ்சு: அதிதீவிர கண்காணிப்புப் பிரிவுகள்
இப்புதிய திட்டத்தின்படி மிக மிக ஆபத்தான மற்றும் கடுமையான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் ‘சிவப்பு’ (Red) நிறக் குறியீட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதில் சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் அபாயகரமான பாலியல் வேட்டையாடுபவர்கள், தொடர் வன்புணர்ச்சியாளர்கள் (Serial Rapists) மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோர் சேர்க்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுகிறார்கள்.
இதற்கடுத்தபடியாக “ஆரஞ்சு” நிறக் குறியீட்டின் கீழ் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் மற்றும் தொல்லைகளில் ஈடுபடும் பின்தொடர்பவர்கள் (Stalkers) மற்றும் சைபர் கண்காணிப்பில் (Cyber Surveillance) வைக்கப்பட்டுள்ள நபர்கள் வகைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீல நிறத்தில் சைபர் குற்றவாளிகள்; கருப்பு நிறத்தில் ஆழ்கடத்தல் கும்பல்
தற்போதைய இணையப் பயன்பாட்டுத் தளங்களில் நடக்கும் குற்றங்களைக் கட்டுப்படுத்த ‘நீல நிறம்’ (Blue) பயன்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ் சிறுவர் மற்றும் சிறுமிகளை அல்லது அப்பாவி நபர்களை இணையத்தில் ஏமாற்றி தங்களுக்குச் சாதகமாக மாற்றும் சைபர் குற்றவாளிகள், பாலியல் ரீதியாக மிரட்டிப் பணம் பறிக்கும் ‘செக்ஸ்டார்ஷனிஸ்டுகள்’ (Sexortionists), இணையத்தில் ஒருவரைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சைபர் ஸ்டாக்கர்கள் (Cyber Stalkers) ஆகியோர் கண்காணிக்கப்படுவர். மேலும் குழந்தை பாலியல் ஆபாசக் குற்றங்களான ‘சீசாம்’ (CSAM) போன்ற ஆபாச உள்ளடக்கங்களை இணையத்தில் தேடி நுகர்வோரும் இந்நீல நிறப் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
சர்வதேச அல்லது மாநில எல்லைகளைத் தாண்டிச் செயல்படும் மிக மோசமான நெட்வொர்க்குகளை ஒடுக்க ‘கருப்பு’ (Black) நிறக் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மனித மற்றும் ஆழ்கடத்தல் கும்பல் (Human Trafficking Gangs), சர்வதேச மற்றும் மாநில அளவிலான பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க்குகள் அனைத்தும் இந்தக் கருப்பு நிறப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடப்பட உள்ளனர்.
சிறார் மற்றும் ஆன்லைன் டேட்டிங் குற்றங்களுக்கான பிரத்யேக வண்ணங்கள்
இளம்பருவக் குற்றங்களைக் கையாள்வதற்கும் காவல் துறை தனிக் குறியீடுகளை வகுத்துள்ளது. இதன்படி 18 வயதுக்கு உட்பட்ட சிறார் பாலியல் குற்றவாளிகள் அனைவரும் ‘வெள்ளி’ (Silver) நிறக் குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டு அவர்களின் எதிர்கால நடத்தை மாற்றங்களைக் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேபோல ‘கிரிண்டர்’ (Grindr) போன்ற ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலமாகத் திட்டமிட்டு நடத்தப்படும் ஓரினச் சேர்க்கை பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ‘ஊதா’ (Purple) நிறக் குறியீட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட உள்ளதாகக் காவல் துறை தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு மற்றும் பச்சை: மிதமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள்
பொது இடங்களில் பெண்களைக் கேலி செய்பவர்கள் (Eve-teasing) மற்றும் பெண்களின் அனுமதியின்றி அவர்களை ரகசியமாகப் படம் பிடிக்கும் (Secret Filming) குற்றவாளிகள் ‘இளஞ்சிவப்பு’ (Pink) நிறக் குறியீட்டின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.
இறுதியாக, சமூகத்தில் மீண்டும் நிகழ வாய்ப்பில்லாத தனிமைப்படுத்தப்பட்ட அல்லது மிதமான ஆபத்துடைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இடையேயான பாலியல் குற்றங்களில் (Incest) தொடர்புடைய நபர்கள் ‘பச்சை’ (Green) நிறக் குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளின் முழு விவரங்களையும் அவர்களின் குற்றப் பின்னணியின் தீவிரத்தையும் துல்லியமாக அறிந்து கொண்டு காவல் துறை தனது மனிதவள ஆதாரங்களைச் சரியாகப் பயன்படுத்தி கண்காணிப்பை பலப்படுத்த இந்த புதிய வண்ண வகைப்பாட்டுத் திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





