புதுடெல்லி , ஜூன் 23: கோடைக்கால மாதங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கர்நாடகம் கூடுதல் நீரைப் பயன்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலுவாக வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை முறைப்படி முன்வைத்தனர்.
Also : தமிழகத்தில் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’: அரசாணை வெளியீடு!
TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு: 26 பணியிடங்களுக்கு ஜூன் 30 முதல் விண்ணப்பம்
கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான கோடைக் காலத்தில், தனது படுகைகளில் அனுமதிக்கப்பட்ட தட்டுகளை விட கர்நாடகம் கூடுதலான நீரைப் பயன்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினர். எனவே தற்போது தங்கள் மாநில அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது என்ற கர்நாடகத்தின் வாதத்தை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழகம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பிலிகுண்டுலு சோதனைச் சாவடியில் ஜூன் 22-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திற்கு 6.737 டிஎம்சி தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் வெறும் 2.662 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்போதைய நிலையில் 4.075 டிஎம்சி அளவிற்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை புள்ளிவிவரங்களுடன் தமிழகத் தரப்பு ஆணையத்திடம் விளக்கியது. ஜூன் மாதத்திற்குரிய ஒட்டுமொத்தப் பங்கீடான 9.19 டிஎம்சி நீரையும், அதைத் தொடர்ந்து வரவிருக்கும் ஜூலை மாதத்திற்குரிய 31.24 டிஎம்சி நீரையும் கர்நாடக அரசு எவ்வித தாமதமுமின்றி உடனடியாகத் திறந்துவிட ஆணையம் உத்தரவிட வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய கர்நாடக அரசுப் பிரதிநிதிகள், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நடப்பு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை என்றும் அதன் காரணமாகவே தங்களது மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்றும் வழக்கமான தங்களது வாதத்தை முன்வைத்தனர். இரு மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டறிந்த ஆணையம், பருவமழையின் தீவிரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்தது.
தற்போதைய சூழலில் இன்னும் ஓரிரு வாரங்கள் பொறுத்திருந்து காவிரி படுகையில் பெய்யும் மழையின் அளவை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் உரிய உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்ற ஆலோசனையை ஆணையம் முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, ஜூலை மாதத்திற்கான தண்ணீர் திறப்பு குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடி உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. எனினும் நிலைமையை ஆய்வு செய்து அணைகளின் நீர் வரத்தைப் பொறுத்து இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு விரைவில் வெளியாகும் .





