கோவில்பட்டி: முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவரது புகைப்படத்தை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. அந்த முயற்சியை போலீசார் தடுக்க சென்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசாருக்கும் செருப்படிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

image 450

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற ராஜீவ் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமையில் கட்சியினர் கலந்து கொண்டு ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அரசு பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், அண்மையில் அனிதா ராதாகிருஷ்ணன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தின் போது, அனிதா ராதாகிருஷ்ணனின் புகைப்படத்தை செருப்பால் அடிக்க சிலர் முயன்றனர். இதனை போலீசார் தடுக்க முனைந்தனர். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளிடமிருந்து புகைப்படத்தை போலீசார் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரை மீறி புகைப்படத்தை செருப்பால் அடிக்க முயன்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சில போலீசாரின் மீதும் செருப்பு பட்டதாக தகவல் வெளியாகி, இதையடுத்து போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் சில நிமிடங்கள் பதற்றமான சூழல் நிலவியது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, திமுக மற்றும் அனிதா ராதாகிருஷ்ணனை கடுமையாக விமர்சித்தார். “59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இந்த நேரத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இல்லாதது வேதனை அளிக்கிறது. தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பெற்று வருகிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்பார்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “காங்கிரஸ் தலைவர்களை பற்றி அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசி வருகிறார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல செயல்படுகிறார். சனாதனம் குறித்து பேசத் தொடங்கிய நாளிலிருந்து திமுகவின் தோல்வி ஆரம்பித்துவிட்டது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த எங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது,” என்று தெரிவித்தார்.

அதேபோல், “பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க திமுக அனுமதிக்கவில்லை. அதிமுக ஆட்சி அமைக்க திமுக மறைமுக ஆதரவு அளிக்க முயன்றது. எதிர்காலத்தில் திராவிட ஓநாய்களை விரட்டியடிக்க வேண்டும்,” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அனிதா ராதாகிருஷ்ணன் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்ட அவர், “அவர் விரைவில் சிறைக்கு செல்வார். அதனை திசைதிருப்பவே காங்கிரஸ் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்,” என்றும் கூறினார்.

இந்த சம்பவம் காரணமாக கோவில்பட்டியில் சில நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 983

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »