திமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்ட “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, காவிரி ஆற்றை முழுமையாக தூர்வார தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமலைராஜன் ஆற்றின் கடைமடை பகுதிவரை தூர்வாரும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சிட்டி யூனியன் வங்கியின் சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் முதற்கட்டமாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் சிட்டி யூனியன் வங்கியின் ஓய்வு பெற்ற துணைப் பொது மேலாளர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த நிறுவனமாக சிட்டி யூனியன் வங்கி கடந்த பத்து ஆண்டுகளாக சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீர்வழிப் பாதைகளை தூர்வாரும் பணிகளை தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார். இந்தப் பணிகள் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த ஆண்டில் திருமலைராஜன் ஆற்றின் கடைமடை பகுதிவரை தூர்வாருவதற்காக முதற்கட்டமாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளில் முழுப் பணிகளையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் உயர்த்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜயை விவசாயிகள் சந்தித்து 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதாகவும் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். அதில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஏரி, குளம், குட்டைகளில் இருந்து மண் எடுத்து விவசாய நிலங்களை சமப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும், குடிமராமத்து திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்ததாக கூறினார்.
இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி மற்றும் குளங்களில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையை விவசாயிகள் சார்பில் வரவேற்பதாகவும் கூறினார்.
அதே நேரத்தில், காவிரி ஆற்றை முழுமையாக தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் அவசரத் தேவையாக உள்ளதாகவும் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார். மத்திய அரசு கங்கை நதியை தூர்வாரியதுபோல், காவிரி ஆற்றையும் தூர்வாரும் நோக்கில் “நடந்தாய் வாழி காவிரி” என்ற திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார். ஆனால் அந்தத் திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
எனவே, தற்போதைய அரசு அந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, காவிரி ஆற்றின் தொடக்கப் பகுதிமுதல் கடல்சேரும் முகத்துவாரம்பரை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
காவிரி டெல்டா பகுதிகளில் நீர்வள பாதுகாப்பு, நிலத்தடி நீர் உயர்வு மற்றும் விவசாய உற்பத்தி மேம்பாட்டிற்கு ஆறுகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை சீரமைப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருப்பதாகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இதுபோன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.








