திருவாரூர் , May 26 : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்ததாகக் கூறி, உயிரிழந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட விஜயபுரம், பிள்ளைத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (52). இவர் உள்ளூர் உணவகம் ஒன்றில் சமையல் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். நேற்று மாலை, அவரது வீட்டின் அருகே உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் கோவிந்தராஜன் திடீரென மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கோவிந்தராஜன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து, இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடற்கூறாய்வு (Post-mortem) செய்யப்பட வேண்டும் என்பதால், கோவிந்தராஜனின் உடல் நேற்று இரவு மருத்துவமனை பிணவறையில் (Mortuary) பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இன்று காலை உடற்கூறாய்வு முடிந்து உடலைப் பெற்றுக்கொள்வதற்காக கோவிந்தராஜனின் உறவினர்கள் பிணவறைக்குச் சென்றுள்ளனர். அப்போது, உடலின் முதுகு, கால் மற்றும் முகத்தின் சில பகுதிகளில் எலிகள் கடித்துக் குதறியிருந்ததைக் கண்டு அவர்கள் நிலைகுலைந்து போயினர். சில இடங்களில் எலும்புகள் வெளியில் தெரியும் அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அரசு மருத்துவமனையின் பிணவறையில் உடல்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றும் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் கூறுகையில், “உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றிய மனிதர் மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்ற சோகத்திலேயே நாங்கள் உறைந்து போயிருக்கிறோம். அவரது உடலை அரசு மருத்துவமனையை நம்பி ஒப்படைத்தால், அதற்குக்கூட இங்கு பாதுகாப்பு இல்லை. இந்த அவல நிலைக்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வேதனை தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவமனை உயர் அதிகாரிகளும், காவல் துறையினரும் தப்பியோடிய எலிகளைக் கட்டுப்படுத்தவும், பிணவறையைப் பராமரிக்கவும் உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அலட்சியமாகச் செயல்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கோவிந்தராஜனின் உடலைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.








