
சிறப்பு கட்டுரை : Gold Control Act என்றால் என்ன, அது மீண்டும் அமலுக்கு வருமா, தங்க இறக்குமதி வரி உயர்வு நகை தொழில் மற்றும் நடுத்தர மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆடம்பர பொருள் அல்ல. குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கம் என்பது குடும்ப சேமிப்பு, அவசர கால பாதுகாப்பு, திருமண மரபு மற்றும் பொருளாதார நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் பிரதமர் கூறியதாக பரவிய “தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும், வெளிநாட்டு பயணங்களையும் தவிர்க்க வேண்டும்” என்ற கருத்து நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய கோயம்புத்தூர் கைவிணைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர் சங்க தலைவர் ரகுநாதன் சுப்பையா, “1968-ல் கொண்டு வரப்பட்ட Gold Control Act போன்ற சூழல் மீண்டும் வருமா என்ற அச்சம் தொழில்துறையில் உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
Gold Control Act என்றால் என்ன?
1968ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு Gold Control Act என்ற சட்டத்தை கொண்டு வந்தது. அப்போது இந்தியாவின் அந்நிய செலாவணி நெருக்கடி மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. தங்க இறக்குமதியால் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைகிறது என்ற காரணத்தால் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது.
Also Read : மயிலாடுதுறை : மாட்டாங்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா
இந்த சட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக தங்கம் வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தங்க நகை வியாபாரிகள், பொற்கொல்லர்கள் மற்றும் தங்க தயாரிப்பு தொடர்பான தொழிலாளர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சில சந்தர்ப்பங்களில் கைது நடவடிக்கைகளும் நடந்ததாக கூறப்படுகிறது.
1968 முதல் 1987 வரை இந்த சட்டம் அமலில் இருந்தது. பின்னர் பொருளாதார சுதந்திர கொள்கைகள் மற்றும் வர்த்தக மாற்றங்களுக்குப் பிறகு அந்த சட்டம் நீக்கப்பட்டது.
தொழில்துறையின் கவலை
ரகுநாதன் சுப்பையா தனது பேட்டியில், “1968-ல் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இப்படியான கருத்துகள் வந்திருக்கலாம். ஆனால் 2026-ல்கூட தங்கம் வாங்க வேண்டாம் என்ற நிலைப்பாடு பேசப்படுவது தங்கத் துறைக்கு பெரிய கவலையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்தியாவில் சுமார் 5 கோடி பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்க நகை தொழிலை நம்பி வாழ்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே சுமார் 5 லட்சம் பேர் இந்தத் துறையை சார்ந்துள்ளனர்.
கம்பி இழுக்கும் தொழிலாளர்கள், மெஷின் கட்டிங், பஃபிங், டல்லிங், பொற்கொல்லர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் வரை இந்தத் துறையுடன் இணைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தங்க இறக்குமதி வரி உயர்வு ஏன் முக்கியம்?
தங்க இறக்குமதிக்கான Customs Duty 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் முக்கிய காரணம் அந்நிய செலாவணி அழுத்தம் என்று விளக்கப்பட்டுள்ளது.
இந்தியா தங்கம் உள்ளிட்ட metal-based products-ஐ பெரும்பாலும் US Dollar மூலம் இறக்குமதி செய்கிறது. இந்திய ரூபாயை டாலராக மாற்றி தங்கம் வாங்க வேண்டிய நிலை இருப்பதால் வெளிநாட்டு நாணய அழுத்தம் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்காகவே தங்க வாங்குதலை குறைக்க வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுவதாக தொழில்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
ஆனால் இதன் தாக்கம் நேரடியாக பொதுமக்கள் மீதே விழுகிறது என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
“கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றியது தங்கம்”
பேட்டியில் மிக முக்கியமாக பேசப்பட்ட விஷயம், கோவிட் காலத்தில் தங்கத்தின் பங்கு பற்றியது.
“கொரோனா காலத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க கூட பயந்த சூழலில் குடும்பங்களை காப்பாற்றியது சேமிப்பாக இருந்த தங்கம்தான்” என்று ரகுநாதன் சுப்பையா கூறியுள்ளார்.
சிறு வியாபாரிகள், பழக்கடை வைத்தவர்கள், இட்லி விற்பவர்கள், சாலையோர வியாபாரிகள் என பலர் தங்களிடம் இருந்த தங்கத்தை அடகு வைத்து மீண்டும் வாழ்க்கையை தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் தமிழ்நாட்டில் தங்கம் என்பது வெறும் முதலீடு அல்ல, குடும்பங்களின் அவசர நிதி பாதுகாப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
தங்க விலை உயர்வு மற்றும் நடுத்தர மக்களின் சிக்கல்
2025 ஜனவரியில் ஒரு பவுன் தங்கம் சுமார் 60,000 ரூபாய் அளவில் இருந்ததாகவும், பின்னர் மாதங்கள் செல்ல செல்ல விலை வேகமாக உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில காலகட்டங்களில் ஒரு பவுன் தங்கம் 1.5 லட்சம் ரூபாய் வரை சென்றதாக அவர் கூறியுள்ளார். தற்போது விலை சற்றே குறைந்திருந்தாலும், உயர்ந்த import duty மற்றும் சந்தை நிலை காரணமாக பொதுமக்கள் தங்கம் வாங்க தயங்குகிறார்கள்.
“முன்பு 5 பவுன் வாங்கியவர்கள் இப்போது 2 அல்லது 3 பவுன் மட்டுமே வாங்க முடிகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மாதம் 25,000 ரூபாய் சம்பாதிக்கும் குடும்பம் அல்லது ஒரு டிரைவர் மாதம் 5,000 ரூபாய் சேமித்தாலும் அந்த சேமிப்பை தங்கமாகவே மாற்ற முயற்சிப்பார்கள். ஆனால் இப்போது அது கூட சாத்தியமில்லாத நிலை உருவாகி வருவதாக அவர் கூறியுள்ளார்













