கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.டி.ஓ (RTO) விசாரணை நடத்தக் கோரியும், கணவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் கண்ணீர் மல்க திரண்டதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவருக்கும், பரணிபிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. பரணிபிரியா தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாகப் பிரிவில் (Admin) பணியாற்றி வந்தார்.
திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில காலமாகவே குடும்பப் பிரச்சினைகளும், அது தொடர்பான வாக்குவாதங்களும் தொடர்ந்து நீடித்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று மாக்கினாம்பட்டியில் உள்ள தனது வீட்டில் பரணிபிரியா தற்கொலை செய்து கொண்டதாகப் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீஸார், அவரது தங்கை மகேஸ்வரிக்குத் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துள்ளனர். அக்காவின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாகப் பொள்ளாச்சிக்கு விரைந்தனர். பரணிபிரியாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே, பரணிபிரியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஈ.எஸ்.ஐ (ESI) அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் திரண்ட உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் கண்கலங்கியபடி பேசிய பரணிபிரியாவின் சகோதரி மகேஸ்வரி, “என் அக்காவின் மரணம் இயல்பானது அல்ல. இதில் எங்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. திருமண வாழ்க்கையில் தொடர் பிரச்சினைகள் இருந்த சூழலில், இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை உடனடியாக வெளிவர வேண்டும். காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
உறவினர்கள் தரப்பில், திருமணமான மூன்று ஆண்டுகளிலேயே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதால், உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் (RTO) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், பரணிபிரியாவின் மரணத்திற்குக் காரணமான அவரது கணவர் கார்த்தீஸ்வரனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதுவரை உடலை வாங்கப் போவதில்லை என அவர்கள் உறுதியாக நின்றதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
இதையடுத்து அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்படும் என்றும், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸார் உறுதியளித்தனர். அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்தனர். இந்தத் திடீர் பரபரப்பு காரணமாக ஈ.எஸ்.ஐ மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக்கூட வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே அடுத்தடுத்து பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் குற்றச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. நேற்று முன்தினம் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் கொலைச் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், நேற்று பொள்ளாச்சி அருகே பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






