சேலம் , ஜூன் 23: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக காவல்துறையினரே நள்ளிரவில் மாந்திரீக பூஜை மற்றும் கிடா வெட்டு வழிபாட்டில் ஈடுபட்ட வினோத சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே கிடா வெட்டப்பட்டு அதன் ரத்தம் காவல் நிலைய சுவர்களில் பூசப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தீவெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் நிரந்தர காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. அங்குள்ள இரண்டு உதவி ஆய்வாளர்களின் (சப்-இன்ஸ்பெக்டர்கள்) தலைமையின் கீழ்தான் இந்த காவல் நிலையம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை சுமார் 4 மணி அளவில் காவல் நிலையத்திற்குள் இந்த ரகசிய பூஜை அரங்கேறியுள்ளது.
திரைப்படங்களில் வருவது போன்ற ஒரு காட்சியாக காவல் நிலைய எல்லைக்குள் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்தவொரு தீய சக்திகளும் அண்டக்கூடாது என்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க வேண்டும் என்றும் வேண்டி இந்த வழிபாட்டை அவர்கள் நடத்தியுள்ளனர். காவல் நிலையத்திற்கு எந்தவொரு புகாரும் வராத அளவிற்கு குற்றங்கள் முற்றிலும் குறைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த பூஜை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
பூஜையின் ஒரு பகுதியாக காவல் நிலைய வளாகத்திற்குள் விடிவதற்கு முன்பே ஒரு கிடா (ஆடு) பலியிடப்பட்டுள்ளது. மேலும் பலியிடப்பட்ட அந்த ஆட்டின் ரத்தத்தை எடுத்து காவல் நிலையத்தின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் முழுவதும் காவல்துறையினரே கைகளால் அப்பி ரத்தக் கறையை ஏற்படுத்தியுள்ளனர். விடிந்த பிறகு காவல் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் பிற காவலர்கள், காவல் நிலைய தரை மற்றும் சுவர்களில் ரத்தம் உறைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வழிபாடு முடிந்த அடுத்த கட்டமாக பலியிடப்பட்ட அந்த ஆட்டின் கறியை காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள ஒரு இறைச்சிக் கடைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அக்கடைக்காரரின் உதவியுடன் மட்டன் பிரியாணி சமைக்கப்பட்டு காவல் நிலைய ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து விடியற்காலையிலேயே தடபுடலான விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
சட்ட விதிகளின்படி புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி குற்றங்களைத் தடுப்பதும் காவல்துறையின் முதன்மைக் கடமையாகும். ஆனால் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய சட்டம் ஒழுங்கு அதிகாரிகளே காவல் நிலையத்திற்குள்ளேயே மாந்திரீகப் பாணியில் ரத்தம் தெளித்து வினோத வழிபாடு நடத்தியிருப்பது ல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.





