திண்டிவனம் , ஜூன் 15 : சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முப்பத்தியோரு தொகுதிகளில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பது பாட்டாளி மக்கள் கட்சி போட்ட பிச்சை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாடகமாடி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

அதிமுகவில் தற்போது உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் தலைமையில் கட்சி இரண்டு அணிகளாக உடையும் சூழல் உருவானது. இத்தகைய இக்கட்டான சூழலில், முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உள்ளிட்ட சிலர் திமுக பக்கம் தாவினர். மேலும் சிலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஐக்கியமாகினர். இந்த அரசியல் நகர்வுகள் நிகழ்ந்த சில நாட்களிலேயே, எஸ்.பி. வேலுமணிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே இருந்த முட்டல் மோதல்கள் முடிவுக்கு வந்தன. எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சுமூக உறவைப் பேணத் தொடங்கிவிட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மட்டும் தங்களின் தனி வழிப் போக்கைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
also : அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா: இடைத்தேர்தலுக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
இபிஎஸ் மகனுக்கு ஐ.டி விங் பதவியா? அதிமுகவில் வெடித்த எதிர்ப்பு.. ராஜ் சத்யன் கடும் ஆட்சேபனை!
கும்மிடிப்பூண்டி சிறுமி மரணம்: தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் – திருவள்ளூர் போலீஸ் எச்சரிக்கை
இந்தத் தொடர் அரசியல் விவாதங்களுக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், பாட்டாளி மக்கள் கட்சியுடனான கூட்டணி குறித்தும், கட்சியின் தற்போதைய தலைமை குறித்தும் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியால் தான் அதிமுக முப்பத்தியோரு இடங்களில் வென்றது என்று கூறுவது தவறு என்றும், உண்மையில் அது பாமக போட்ட பிச்சை என்றும் அவர் சாடினார். தற்போதைய சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வட மாவட்டங்களான அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் அதிமுகவின் நிலையை விவரித்தார். எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே அவர் தப்பித் தவறி, தட்டுத் தடுமாறித்தான் வெறும் ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்து இருக்கிறார் என்றும் சி.வி.சண்முகம் எள்ளி நகையாடினார்.
தமக்கு ‘ஆமாம் சாமி’ போடுபவர்களை மட்டுமே எடப்பாடி பழனிசாமி எப்போதும் தன் பக்கத்தில் வைத்துக் கொள்கிறார் என்று குற்றம் சாட்டிய சண்முகம், கட்சியின் பொதுக்குழுவையோ அல்லது அவசரக் செயற்குழுவையோ உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுக்குழுவைக் கூட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டால் உடனடியாகச் செயற்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், அதில் அனைவரையும் அழைத்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கட்சியின் தோல்விக்கான காரணங்கள் என்ன, கட்சி அடுத்தகட்டமாகச் சீரமைக்கப்பட என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க ஏன் அஞ்சுகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதிமுக தற்போது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமி நேற்று நடத்திய கூட்டத்தில் திரண்டவர்கள் அனைவரும் அவரது மகனை அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஆரவாரம் செய்ததைச் சுட்டிக்காட்டினார். உங்கள் மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் அதற்கு ஏன் இந்த நாடகம் என்றும் அவர் வினவினார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், உங்கள் பிள்ளை அரசியலுக்கு வருவதற்கும், பணியாற்றுவதற்கும், மக்கள் சேவை செய்து உயர்வதற்கும் முழு உரிமை உண்டு என்றும், அதனை நேரடியாகச் செய்யலாமே தவிர இத்தகைய நாடகங்கள் தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.







