Chennai ,June 15 : அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்யன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ,தமிழக அரசியல் வட்டாரத்திலும் குறிப்பாக அதிமுக உட்கட்சி அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து ,அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் உற்றுநோக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ,அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் ,அவருக்கு மாநில இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணியின் (IT Wing) மாநிலச் செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகத் தொடங்கி ,தற்போது ஊடக விவாதங்கள் வரை பரவியுள்ள சூழலில்தான் ,அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாகவும் ராஜ் சத்யன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
also : அதிமுகவில் ‘ஈபிஎஸ் மகன்’ விவகாரம் தீவிரம்: சி.வி.சண்முகம் – பசுபதி மோதலால் அதிமுகவில் பரபரப்பு
அரசியலில் இல்லாதவர்களையும் ,கட்சியின் பொதுச்செயலாளரின் குடும்பத்தினரையும் தொடர்ந்து கட்சியின் அரசியல் விவாதங்களுக்குள் இழுக்கும் முயற்சிகள் திட்டமிட்டு நடைபெற்று வருவதாக ராஜ் சத்யன் சாடியுள்ளார். இதன் மூலம் கட்சிக்கு எதிரான ஒரு தவறான பிம்பத்தை (Narrative) உருவாக்கச் சிலர் முயல்வதாகவும் அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார். சமூக வலைதளங்களில் தன்னிச்சையாகத் தொடங்கிய இந்த விவாதம் ,தற்போது பத்திரிகைகள் மற்றும் ஊடக விவாதங்கள் வரை பரவி இருப்பது வேதனைக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ,அண்மையில் சந்தித்த தேர்தல் பின்னடைவு ,அதனைத் தொடர்ந்து கட்சியின் உள்ளே நடைபெறும் பல்வேறு உட்கட்சி நிகழ்வுகள் மற்றும் களத்தில் நின்று உழைக்கும் சாதாரண தொண்டர்களின் உழைப்பைக் குறைத்து மதிப்பிடும் நடவடிக்கைகள் எனப் பல்வேறு சவால்களை அதிமுகவினர் தற்போது எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் ,இது போன்ற தேவையற்ற மற்றும் அடிப்படையற்ற விஷயங்களைப் பேசி விவாதத்தை திசைதிருப்புவது முற்றிலும் தவறானது என்றும் அவர் தனது பதிவில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுக்குப் பொறுப்பு வழங்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து ,ஏற்கனவே அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து ,தற்போது கட்சியின் முக்கியப் பிரிவான தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக இருக்கும் ராஜ் சத்யனும் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துப் பதிவிட்டிருப்பது அதிமுகவிற்குள் விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.






