ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு: “உதயநிதி – இபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடந்தது”.. விஜய் முதல்வராவதை தடுக்க முயற்சி என கடும் தாக்கு

உதயநிதி மீது ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதமாக மாறியுள்ளன. திமுகவின் தேர்தல் தோல்விக்கும், அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் நகர்வுகளுக்கும் நேரடியாக மு .க .ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினும் காரணம் என அவர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். அதேசமயம், நடிகர் விஜய் முதல்வராக வருவதை தடுக்க பல்வேறு ரகசிய முயற்சிகள் நடந்ததாகவும் அவர் கூறியிருப்பது அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில், “இந்த புரட்சிக்கும் தோல்விக்கும் காரணம் இரண்டு பேர்தான். ஒருவர் மு க ஸ்டாலின், இன்னொருவர் அவரது மகன் உதயநிதி” என்று வெளிப்படையாக தெரிவித்தார். இதற்காக அதிக ஆராய்ச்சி தேவையில்லை என்றும், திமுகா ஆதரவாளர்களே தற்போது விரக்தியில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“குதிரை பேர அரசியல் யார் செய்தது?” என்ற கேள்வி
திமுகா தரப்பிலிருந்து “குதிரை பேர அரசியல்” குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு நேரடி பதிலடி அளிக்கும் விதமாக ஆதவ் அர்ஜுனா பேசினார். “இது குதிரை பேர அரசியல் இல்லை, குதிரை வேக அரசு” என்று விஜய் ஏற்கனவே பதிலளித்ததாக கூறிய அவர், உண்மையில் யார் அரசியல் பேரம் நடத்தினார்கள் என்பது குறித்து தாம் விளக்கப் போவதாக தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அரசியல் கணக்குகள் தீவிரமாக பேசப்பட்டதாகவும், அதில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியுடன் உதயநிதி பேசியதாகவும், அந்த பேச்சுவார்த்தைக்கு ஒரு தொழிலதிபர் ( பாஷியம் கம்பெனி ) உதவியதாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவரது பேச்சில், “பழனிசாமியோடு பேச்சுவார்த்தை நடந்தது. ஒரு தொழிலதிபர் உதவியோடு அந்த பேச்சு நடந்தது. யார் குதிரை பேரம் பேசினார்கள் என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
“விஜய் முதல்வராக வரக்கூடாது என்பதற்காக முயற்சி”
தேர்தலில் தமிழ வெற்றி கழகம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், பல தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டதாக ஆதவ் அர்ஜுனா கூறினார். “சுமார் 20 தொகுதிகளில் 300 முதல் 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர், நடிகர் விஜய் முதல்வராக வருவதை தடுக்கவே பல்வேறு அரசியல் முயற்சிகள் நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். பெரும்பான்மை இருந்த போதிலும் ஆளுநர் உடனடியாக ஆட்சியை அமைக்க அழைக்கவில்லை என்றும், அந்த இடைவெளியில் அரசியல் நகர்வுகள் நடந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் Rahul Gandhi உடனடியாக ஆதரவு தெரிவித்ததாகவும், “விஜய் முதலமைச்சராக வேண்டும், தேவையானதை செய்யுங்கள்” என்று டெல்லியிலிருந்து தெளிவான அரசியல் நிலைப்பாடு வந்ததாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கவில்லை என குற்றச்சாட்டு
அதே நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த அரசியல் அமைப்புக்கு முழுமையான ஆதரவு அளிக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் பேபி கூறிய கருத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
“நாங்கள் ஆதரிக்கவில்லை என்றால் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து பாஜக ஆதரவு அரசை உருவாக்கும் சூழல் உருவாகும்” என்ற வகையிலான அரசியல் நிலைப்பாடு வெளிவந்ததாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். இதன் மூலம் தமிழக அரசியலில் திரைமறைவு கூட்டணிகள் உருவாக முயற்சி நடந்ததாக அவர் கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“உதயநிதி, சபரீசன் இணைந்து கட்சியை முடிக்கிறார்கள்”
திமுகா தேர்தல் தோல்விக்குக் காரணமான அதே அணியே தற்போது கட்சியையும் பலவீனப்படுத்தும் வேலை செய்து வருவதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார். “உதயநிதியும் சபரீசனும் சேர்ந்து ஆட்சியையும், கட்சியையும் முடிக்கும் பணியில் இருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவரது மகன் மித்துன் உள்ளிட்டோர் தொடர்பில் இருந்ததாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் அதிமுகவிலேயே உடைப்பு ஏற்பட்டதாகவும், சில முக்கிய நிர்வாகிகள் வெளியேறியதற்கும் இதுவே காரணம் என்றும் அவர் கூறினார்.
“திமுக – அதிமுக இணைப்பு முயற்சி நடந்தது” என அதிர்ச்சி குற்றச்சாட்டு
தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலை ஏற்படுத்திய பகுதி, திமுகாவும் அதிமுகாவும் இணைந்து வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் வகையிலான அரசியல் திட்டம் பேசப்பட்டதாக ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பதுதான். “விஜய் முதல்வராக வரக்கூடாது என்பதற்காகவே இந்த அரசியல் சூழ்ச்சி நடந்தது” என்று அவர் நேரடியாக குற்றம்சாட்டினார்.
இதற்காக ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர், ஆளுநர் தரப்பு மற்றும் சில முக்கிய அரசியல் தலைவர்கள் இணைந்து செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதமாக மாறியுள்ளன.








