விஜய் வைத்த White Paper கோரிக்கை.. IAS அதிகாரி சகாயம் சொன்ன அதிர்ச்சி உண்மை!

தமிழகத்தின் 10 லட்சம் கோடி கடன், White Paper, கனிமவள கொள்ளை குறித்து விஜய் அறிவிப்புக்கு முன்னாள் IAS அதிகாரி சகாயம் அளித்த முக்கிய ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் “White Paper” என்ற வார்த்தை மீண்டும் தீவிரமாக பேசப்பட தொடங்கியுள்ளது. தமிழகத்தின் நிதிநிலை, 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை, கனிமவள கொள்ளை, நிர்வாக சீர்திருத்தம் போன்ற விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள “வெள்ளை அறிக்கை” அறிவிப்புக்கு முன்னாள் IAS அதிகாரி சகாயம் அளித்த பதில் தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் வெளிப்படையாக “தவறுகளை அனுமதிக்க மாட்டேன்” என்று அறிவித்திருப்பது தமிழக மக்களிடம் புதிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளதாக சகாயம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஊழலை அகற்றி நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சிகள் நடந்தால் தமிழ்நாடு மீண்டும் வலுவான பாதைக்கு திரும்பும் என்றும் அவர் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விஜயின் White Paper அறிவிப்புக்கு சகாயம் வரவேற்பு

சமீபத்தில் ஊடகங்களுக்கு பேசிய சகாயம், “மிக சவாலான ஒரு பணி தமிழக அரசுக்கு காத்திருக்கிறது. செலவுகளை குறைத்து, ஊழலை அகற்றி உறுதியான இலட்சியத்தோடு பயணித்தால் மாற்றம் சாத்தியம்” என்று தெரிவித்தார்.

மேலும், “இன்றைக்கு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் பகிரங்கமாக ‘தவறுகளை அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார். அதுவே ஒரு நல்ல அறிகுறி. இந்த அறிவிப்பு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

அரசுக்கு தங்களை போன்ற அதிகாரிகளின் ஆலோசனை தேவைப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த சகாயம், “நான் மிகச் சிறியவன். ஆனால் 30 ஆண்டுகளாக நேர்மையான போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறேன். என்னை உருவாக்கிய தமிழ் சமூகத்திற்காக தொடர்ந்து என்னுடைய பங்களிப்பை செய்வேன்” என்று கூறினார்.

கனிமவள கொள்ளை குறித்து மீண்டும் பேசப்பட்ட பழைய சர்ச்சை

தமிழகத்தில் கனிமவள கொள்ளை விவகாரம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் ஒரு பெரிய பிரச்சினை. குறிப்பாக, கிரானைட் ஊழல் விவகாரத்தை இந்திய அளவில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அதிகாரிகளில் முக்கியமானவர் சகாயம்.

அந்த விவகாரம் குறித்து பேசிய அவர், “2010-க்கு முன்பாக இந்தியாவிலும் ஆசியாவிலும் மிகப்பெரிய Granite Scam-ஐ நான் வெளிக்கொண்டு வந்தேன். ஆனால் இன்றுவரை அதில் பெரிய முன்னேற்றம் இல்லை. நமது அமைப்பு எவ்வளவு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதனிடையே, “மாண்புமிகு விஜய் அவர்களின் ஆட்சியில் கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தப்படும் என்று நம்புகிறேன்” என்ற அவரது கருத்து தற்போது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

10 லட்சம் கோடி கடன்.. தமிழகத்தின் மிகப்பெரிய சவால்?

தமிழகத்தின் நிதிநிலை குறித்த கேள்விக்கும் சகாயம் நேரடியாக பதிலளித்தார். “தமிழக அரசு தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பது உண்மை. ஒவ்வொரு ஆண்டும் அந்த கடனுக்கான வட்டிக்கே பெரும் தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், “செலவுகளை கட்டுப்படுத்தி, ஊழலை அகற்றி, உறுதியான நிர்வாகத்தோடு சென்றால் ஒரு காலகட்டத்தில் இந்த நிலைமையை மாற்ற முடியும்” என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

விஜய் அறிவித்துள்ள White Paper குறித்த கேள்விக்கு, “அது அருமையான முடிவு. அந்த வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என்று கூறியதை நாம் வரவேற்க வேண்டும்” என்று சகாயம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »