சென்னை, ஜூன் 23: தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளைக் கௌரவிக்கும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்ட இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக 753 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்காகப் பெருமளவில் அரசு மருத்துவமனைகளையே சார்ந்துள்ளனர். அவ்வாறு அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த, இங்கு நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது. தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் எளிய குடும்பங்களின் மகிழ்ச்சியைப் பெருக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Also :ஜூன் 26 முதல் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
கடந்த ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 22 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த ஒரு கிராம் தங்க மோதிரம் பின்தேதியிட்டு கணக்கிடப்பட்டு வழங்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ தொடக்க விழா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தமிழக முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார்.
TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு: 26 பணியிடங்களுக்கு ஜூன் 30 முதல் விண்ணப்பம்
தமிழக அரசின் இந்த புதிய தொலைநோக்குத் திட்டம் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு இது ஒரு பெரும் கௌரவமாகவும் பொருளாதார ரீதியிலான சிறு சேமிப்பாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 22 முதல் அமலுக்கு வந்துள்ள இத்திட்டத்திற்கான பயன்கள் அனைத்தும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடையத் தொடங்கும்.





