நெல்லை கார் பருவ நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ₹4000 மானியம்: வேளாண் துறை

நெல்லை  ,ஜூன் 19 : நெல்லை மாவட்ட கார் பருவ நெல் சாகுபடிக்கு இயந்திர நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள விவசாயிகள் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து அண்மையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் பயிரிடும் பணியை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாகவே இக்காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் ஆள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் நடவுப் பணியை எளிதாக்கவும் இயந்திர நடவு முறை தற்போது வேளாண்மைத் துறையால் பெருமளவில் ஊக்குவிக்கப்படுகிறது.

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட எதிர்ப்பு: சிங்கம்புணரி மற்றும் சுற்றியுள்ள 6 கிராமங்களில் முழு கடையடைப்பு

இதன் ஒரு பகுதியாக டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்திற்கு இந்த நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி கார் பருவத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கும் அல்லது நேரடி நெல் விதைப்பு முறையைப் பின்பற்றும் விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் பாரம்பரிய விவசாய முறையிலிருந்து நவீன தொழில்நுட்பத்திற்கு மாறும் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதாரப் பக்கபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பருவத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் மானியத் தொகையுடன் சேர்த்து விவசாயிகளுக்குத் தேவையான இதர வேளாண் உள்ளீடுகளும் தங்கு தடையின்றி வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குத் தரமான சான்று பெற்ற விதை நெல் ,பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நெல் நுண்ணூட்ட உரம் மற்றும் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் திரவ உயிர் உரம் ஆகியவையும் மானிய விலையில் விநியோகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாகுபடி செலவு கணிசமாகக் குறைந்து லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த அரசின் சிறப்பு மானியத் திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலம் மற்றும் அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காகத் தங்களது அடையாள அட்டை ,கைபேசி எண் ,வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ,விவசாய நிலத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் பட்டா மற்றும் நடப்புப் பருவத்திற்கான அடங்கல் ஆகிய ஆவண நகல்களுடன் வரும் ஜூலை 31ஆம் தேதிக்கு முன்பாக அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி ஆன்லைன் மூலம் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் விபரங்களைப் பெறவும் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன் தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். காலத்தே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்த மானிய வாய்ப்பைப் பயன்படுத்தி விவசாயிகள் விரைந்து சாகுபடிப் பணிகளைத் திட்டமிடுமாறு வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *