கிருஷ்ணகிரி ,ஜூன் 19 : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் ,குழந்தைகள் மற்றும் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். தெருநாய்களின் தொல்லை குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் மற்றும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வந்தன.
பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ,காவேரிப்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் பணியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் முதற்கட்டமாக ,காவேரிப்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் ராணி தலைமையிலான பேரூராட்சிப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் காவலர்கள் அடங்கிய குழுவினர் ,நகரின் முக்கிய வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களைப் பாதுகாப்பான முறையில் பிடித்தனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட தெருநாய்களுக்கு ,கால்நடை மருத்துவர் ரமேஷ் முன்னிலையில் முதற்கட்டமாக நோய்த் தடுப்பு மற்றும் கருத்தடைக்கான முதற்கட்ட தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. காவேரிப்பட்டினம் நகர்ப் பகுதியில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு கண்டறியப்பட்ட 53 தெருநாய்களுக்குத் தற்பொழுது முழுமையாகத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் குறித்துத் தகவல் தெரிவித்த கால்நடை மருத்துவக் குழுவினர் ,தற்போது முதற்கட்டமாகத் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தடையின்றி நடைபெற்று வருவதாகவும் ,அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தத் தெருநாய்கள் அனைத்தும் பர்கூர் கால்நடை மருத்துவமனைக்கு முறையாகக் கொண்டு செல்லப்பட்டு ,அங்கு அவற்றுக்கு முழுமையான கருத்தடை அறுவை சிகிச்சை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகத் தெருநாய்களின் அச்சுறுத்தலால் அச்சத்துடன் நடமாடி வந்த காவேரிப்பட்டினம் பகுதி மக்கள் ,தற்பொழுது பேரூராட்சி அதிகாரிகளும் கால்நடை மருத்துவத் துறையினரும் இணைந்து எடுத்து வரும் இந்தத் தீவிர நடவடிக்கையால் நிம்மதி அடைந்துள்ளனர். இப்பணிகளைத் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





