‘சிங்கப்பெண்’சிறப்பு அதிரடிப்படை’ நாளை-ஜூன் 9-ல் தொடக்கம்- முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்

image 85

சென்னை , ஜூன் 8 : தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை வரும் ஒன்பதாம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து, இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வாகனங்களின் சேவையைத் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.ஏற்கனவே இருமுறை திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்தத் தொடக்க விழா, தற்போது ஒன்பதாம் தேதி உறுதியாக நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALso read: தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை: மயிலாடுதுறையில் எம்.பி.ஆர்.சுதா குற்றச்சாட்டு

தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிப் படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.அதன்படி, தற்போதைய அரசு பொறுப்பேற்ற பின்னர் இதற்கான கோப்புகளில் கையெழுத்திடப்பட்டு, கடந்த சில மாதங்களாகப் படை உருவாக்கம் மற்றும் கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.இதனிடையே, இதற்கான தொடக்க விழா இரண்டு முறை வெவ்வேறு தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் அவை தள்ளிப்போயின.இந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்து, தொடக்க விழாவிற்கான இறுதி ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தச் சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக மூத்த காவல் துறை அதிகாரி ஐ.ஜி.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.இப் படை முழுவதும் முதலமைச்சரின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.ஐ.ஜி.பவானீஸ்வரியின் தலைமையின்கீழ், கண்காணிப்பாளர்கள் (SP), துணைக் கண்காணிப்பாளர்கள் (DSP) மற்றும் ஆய்வாளர்கள் (Inspectors) உள்ளிட்ட மொத்தம் 36 அனுபவம் வாய்ந்த சிறப்பு காவல் அதிகாரிகள் முதற்கட்டமாக இந்தப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.குற்றத்தடுப்பு மற்றும் விரைவு நடவடிக்கைகளில் தனி முத்திரை பதித்த அதிகாரிகள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படைப் பிரிவினருக்கான பிரத்யேகச் சீருடைகள், அவற்றின் நிறங்கள் மற்றும் சின்னங்கள் குறித்த அதிகாரப்பூர்வப் புகைப்படங்களை அரசு அண்மையில் வெளியிட்டிருந்தது.தற்போது இந்த அதிகாரிகளுக்கான சீருடைகள், நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ரோந்துப் பணிக்கான வாகனங்கள் அனைத்தும் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பொது இடங்களிலும், இணைய வழியிலும் (Cyber Crimes) நிகழும் குற்றங்களைத் தடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தான நேரங்களில் மிக விரைவாகப் பாதுகாப்பை வழங்குவதே இந்த அதிரடிப்படையின் முக்கிய நோக்கமாகும்.குறிப்பாக, பெண்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவன வளாகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் இதர பொது இடங்களில் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்குத் தீவிரக் கண்காணிப்பு மற்றும் தொடர் ரோந்துப் பணிகளை இந்தப்படையினர் மேற்கொள்ள உள்ளனர்.அவசரக் காலங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்படையினருக்கு நவீனத் தொடர்புச் சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

தொடக்க விழா தள்ளிப்போனதைத் தொடர்ந்து, எழும்பூர் மைதானத்தில் உள்ளரங்குப் பணிகள் மற்றும் வாகனப் பரிசோதனைகள் தற்போதும் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றன.ஒன்பதாம் தேதி முதலமைச்சர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கான அனைத்துப் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகளையும் காவல் துறையினர் இறுதி செய்து வருகின்றனர்.

Editor Desk
Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

Articles: 1502

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *