மதுரை , ஜூன் 8: தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை என்றும் இது தொடர்பாக அரசு இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். இத்திட்டத்தில் உள்ள தொழில்நுட்பச் சவால்கள் மற்றும் நிதிச் சுமை குறித்து அரசு தற்போது விரிவான ஆய்வுகளை மட்டுமே மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது , ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து இன்று வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்று மறுத்தார். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின் நுகர்வு அளவீடுகளைத் துல்லியமாக எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் முன்வைக்கப்பட்டாலும் இதில் மிகப்பெரிய அளவிலான முதலீடு தேவைப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய சூழ்நிலையில் சுமார் 30,000 கோடி ரூபாய் வரையிலான இத்தகைய பிரம்மாண்ட நிதிச் சுமையைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் (TANGEDCO) தாங்க இயலுமா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டியுள்ளது என்றார்.
To read ; ‘சிங்கப்பெண்’சிறப்பு அதிரடிப்படை’ ஜூன் 9-ல் தொடக்கம்- முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்
இத்திட்டத்தின் தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்துப் பேசிய அமைச்சர் ஸ்மார்ட் மீட்டர்களில் மோடம் மற்றும் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என்றார். தமிழகத்தின் பல பகுதிகளில் போதிய அலைவரிசைச் (Signal) சிக்னல் கிடைக்காத சூழல் இருக்கும்போது அனைத்து இடங்களிலும் இந்தத் தொழில்நுட்பம் தடையின்றிச் சாத்தியமாகுமா என்பதை முதலில் ஆராய வேண்டியுள்ளது. ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக அரசு அலுவலகக் கட்டடங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பில்டிங்குகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பல அரசு அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருவதால் அங்கெல்லாம் இந்த மீட்டர்களை மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் பட்டியலிட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
சென்னையின் தி.நகர் பகுதியில் ஏற்கனவே முன்னோடித் திட்டமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுச் செயல்பாட்டில் உள்ளன. அந்த மீட்டர்களில் எவ்வளவு பிழைகள் (Error percentage) ஏற்படுகின்றன என்பதை அரசு கண்காணித்து வருகிறது. திடீரென 50 லட்சம் மீட்டர்களைப் பொருத்திவிட்டு எதிர்காலத்தில் அதில் ஏதேனும் தொழில்நுட்பப் கோளாறுகள் ஏற்பட்டால் அதனை உடனடியாகச் சரிசெய்வது மிகப்பெரிய சவாலாக மாறும். எனவேதான், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் இந்தத் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படக் கையாள்வது என்பது குறித்து அரசு நிதானமாக ஆய்வு செய்து வருகிறது.
தொழில்நுட்பத்தின் ஆயுட்காலம் குறித்தும் அமைச்சர் தனது கவலையை வெளிப்படுத்தினார். தற்போது 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ள நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொழில்நுட்பம் மாறினால் இந்த மோடம் மற்றும் சிம் கார்டுகள் அதற்கு ஒத்துழைக்குமா என்ற கேள்வி எழுகிறது. இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவே 6 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகலாம். அதற்குள் புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டால் மீண்டும் பழைய மீட்டர்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். 1990-களில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் முறையான திட்டமிடல் இல்லாமல் எடுத்த முடிவுகளால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு அந்தத் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை உருவானதை அவர் உதாரணமாகக் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள சாதாரண மின் மீட்டர்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி உழைக்கக்கூடியவை. ஆனால் சிம் கார்டு மற்றும் மோடம் கொண்ட ஸ்மார்ட் மீட்டர்கள் 20 ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்குமா என்பதை வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களின் செயல்பாடுகளைக் கொண்டு முழுமையாக மதிப்பிட வேண்டியுள்ளது. எனவே ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்துப் பரவிய செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளியானவை என்றும், முதற்கட்டமாக அரசு கட்டடங்களில் இதனை எப்படிச் செயல்படுத்துவது என்பது குறித்த தரவு சேகரிப்பு மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாகக் கூறினார்.







