அருப்புக்கோட்டை May 27 : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளில், தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு செவ்வாய்க்கிழமை (மே 26) நேரில் சென்று விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். குவாரி செயல்பாடுகளில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திடீர் ஆய்வின் போது, குவாரிகளின் சட்டப்பூர்வ அனுமதி ஆவணங்கள், தினசரி பராமரிக்கப்படும் பதிவேடுகள், வெட்டி எடுக்கப்படும் கற்களின் அளவு மற்றும் கனிமப் போக்குவரத்து தொடர்பான அனைத்து தரவுகளையும் அமைச்சர் முழுமையாக ஆய்வு செய்தார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகக் கனிமங்கள் அள்ளப்படுகிறதா, உரிய வழிகாட்டுதல்களின்படிதான் வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
Also Read : தென்பெண்ணை ஆற்றங்கரை கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கேஆர்பி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
தொழிலாளர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்:
குறிப்பாக, குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த அம்சங்களுக்கு இந்த ஆய்வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பணியிடங்களில் விபத்துகளைத் தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள அவசரகால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தலைக்கவசம், பாதுகாப்பு காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களின் தரம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், தொழிலாளர்களின் உடல்நலனைப் பாதுகாப்பதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகத் தரப்பிடம் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆய்வின் நிறைவாகப் பேசிய அமைச்சர் டி.கே.பிரபு, “பாதுகாப்பு விதிமுறைகளில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பிற்கும், அவர்களின் உடல்நலனுக்கும் குவாரி நிர்வாகங்கள் முதலிடம் அளிக்க வேண்டும். விதிகளை மீறிச் செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் பாயும்,” என்று எச்சரித்தார். மேலும், அரசு விதித்துள்ள வழிகாட்டுதல்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா இ.கா.ப., மதுரை மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் திரு. லோ. சட்டநாதன் சங்கர், விருதுநகர் மாவட்ட உதவி இயக்குநர் முனைவர் சி. சுகதாரஹிமா, உதவி புவியியலாளர் திரு. கோ. வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.








