கிருஷ்ணகிரி,May27: கிருஷ்ணகிரி அணையின் (KRP Dam) நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருவதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களின் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடியாகும். இதன் ஒட்டுமொத்த கொள்ளளவு 1666.29 மில்லியன் கன அடியாக இருக்கும் நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
அணையின் தற்போதைய நிலவரம்: நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அணையின் தற்போதைய நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. அணையில் இப்போது 1441.76 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 744 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
அணையின் கட்டமைப்பு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, நீர்வளத்துறை அதிகாரிகள் முதல்கட்டமாக வினாடிக்கு 300 கன அடி உபரிநீரை ஆற்றில் திறந்துவிட்டுள்ளனர். அணைக்கு வரும் நீரின் வரத்தைப் பொறுத்து ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக அடுத்த சில மணி நேரங்களுக்குள் ஆற்றின் வழியே வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 1000 கன அடியாக உயர்த்தப்பட உள்ளதாக நீர்வளத்துறை எச்சரித்துள்ளது.
கரையோர கிராமங்களுக்கு நேரடி எச்சரிக்கை: அணையில் இருந்து சாத்தனூர் அணை வரை பாயும் தென்பெண்ணை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்டஹள்ளி மற்றும் தளிஹள்ளி ஆகிய 8 கிராமங்களுக்கு நேரடி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கிருஷ்ணகிரி அணைக்குக் கீழ்நோக்கி அமைந்துள்ள தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் தென்பெண்ணை ஆற்றங்கரைப் பகுதி பொதுமக்களும் விழிப்புடன் இருக்குமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்: பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது ஆற்றைக் கடக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளை ஆற்றின் பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்றும், மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு அவற்றை மாற்றிட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர காலத் தேவைகளுக்காகத் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன








